Monday, February 11, 2019

ராவண விழா

19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியம் (SITA Under the Ashoka Tree). பிராமணிய தொகுப்பின் நீட்சியான ரவி வர்மா, தென்இந்தியர்களை குரங்காகவும், கருப்பாகவும் வரைந்ததில் ஆச்சரியமில்லை. (நாம் கருப்பர்கள் தான் என்பது வேறு விசயம்). ...........

இங்கிருக்கும் எல்லா மதநம்பிக்கைகளையும் ஆராய்ந்து பதிவு செய்கிறார். இயற்கை வழிபாடு, நாட்டாரியல் வழிபாடு என எல்லாவற்றையும் பதிவு செய்யும், 'ராவண விழா' ஒன்று ஆண்டுதோறும் மதுரைக்கும் கீழே கொண்டாடப்பட்டதை பதிவு செய்கிறார்.

 அதாவது, ராவணன் சீதையை கடத்திவந்த நாளை வருடம் தோறும் 'ஆடி அம்மாவாசைக்கு அடுத்தநாள் ' கொண்டாடியதாக குறிப்பிடுகிறார். மற்றொரு குறிப்பில், ராமனை demon யாக மக்கள் முன்வைத்து வழிபட்டதாகவும் பதிவு செய்கிறார். ............

 'ராவணன் ஜலதோஷம் வந்தா எந்த கை எடுத்து சீந்துவான்?' என்ற கடி ஜோக்குகளை கேட்டு வளர்ந்த எங்களுக்கு, 300 வருடங்களுக்கு முன் அவன் ஒரு வழிபாட்டு மரபினனாக இருந்திருக்கிறான் என்பது ஒரு ஆச்சரியமான செய்தியே. காலம் இப்படி தான், வரலாற்றை தொலைந்தவர்களின் நீட்சிகள், அது தொலைந்த இடத்தில் இருந்தே புதுப்பிப்பார்கள்.

 #திருவாங்கூர்_குறிப்புகள்
 # Edited

Sunday, February 10, 2019

பால்ய கால (ஊர்) சினிமாக்கள்

'படம் போடுன்மாம்', இந்த வார்த்தைகளை கேட்டால் காதில் தேன் வடிந்தது போல இருக்கும். 80 களில் ஊரில் எங்காவது ஒரு வீட்டில் டிவி இருந்தாலே ஆச்சரியம். அதுவும், தமிழ் சினிமா எல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'மாநில மொழி திரைப்படம்' வகையில் வந்தால் தான் உண்டு. அன்று பார்த்து மின்சாரம் போய் விட்டால், மீண்டும் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும். 'மலையாளம்' எல்லாம் அன்று தொலைக்காட்சி வழியாக கற்றது தான்.
இந்த காலக்கட்டத்தில் தான் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற ஊர் அண்ணன்கள் வீடுகளுக்கு டி.வியோடு திரும்பி வர துவங்கினார்கள் சிலர் 'டெக்' கோடு.
கொண்டுவந்த டிவியை ஊருக்கு காட்ட போடுகிறார்களா? சுயபெருமிதத்திற்காக போடுகிறார்களா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், எங்களை போல வாண்டுகளுக்கு அது தான் "ஜாக்பாட்". பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவோ, சனிக்கிழமையோ படம் போடுவார்கள். இரண்டு பேருக்கு தெரிந்தால் போதும், ஒரு 100 பேராவது கூடி விடுவார்கள். போடப்படும் படங்களின் பெயர்களும் எப்படியாவது கசிந்துவிடும். குறைந்தது 4,5 கேசட்டுகள் என்று விடிய விடியப் படம் போடுவார்கள். அதும் திரைக்கு வந்து சில வருடங்களே ஆன திரைப்படங்கள். ரஜினியின் 'மாப்பிள்ளை, பணக்காரன்' எல்லாம் இப்படி தொலைக்காட்சியில் போடப்பட்டு பார்த்த திரைப்படங்கள் தான்.
இரண்டு படங்கள் ஓடி முடியும் முன்பே கண்கள் சொக்கும், அடுத்தநாள் படம்பார்க்க வராத நண்பர்களிடம் தம்பட்டம் அடிப்பதற்காகவே கண் சிவக்க சிவக்க படம் பார்ப்போம். நாம் விரும்பிய படத்தை நான்காவதாக போடுகிறார்கள் என்றால், கூடவே இருக்கும் நண்பர்களிடம் அந்த படத்தை போடும் போது எழுப்ப சொல்லி அப்படியே தரையில் கிடந்து உறங்கிய நாட்களும் உண்டு.
இப்படியெல்லாம் படம்பார்க்க அனுமதியெல்லாம் வீட்டில் எளிதாக கிடைத்து விடாது. ஊரின் நம்பிக்கையான ஒரு அண்ணன் யாராவது அந்த இரவுநம்மை 'கார்டியனாக' ஏற்றுக்கொள்கிறேன் என சொல்லி ஜாமீன் அளித்து, அந்த வார இறுதியின் வீட்டுப்பாடங்கள் எல்லாம் செய்து முடித்து ஒப்பித்தால் தான் அனுமதி கிடைக்கும். சினிமா போடும் நாட்களுக்கு ஒருவாரத்திற்கு முன் 'Progress Report' கிடைத்திருந்தால், உள்ளதும் போச்சு; போய் கேட்கவே முடியாது. 'எப்படா மீசை முளைக்கும்! தனியாக போய் படம் பார்க்கலாம்' என்று நினைத்து அழுதுக்கொண்டே தூங்கி விடுவோம்.
வெளிநாட்டுக்கு போய் வந்தவர்கள் கொண்டு வந்த டி.வி தவிர்த்து, வாடகைக்கு டி.வி எடுத்து போடுவார்கள் இளந்தாரிகள். முந்தையதை போல இந்தவகை சினிமா பார்பதற்கும் அதே மவுஸ் என்றாலும் சில நேரம் 'காசு கேட்கும்' அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இன்னொன்று, ஊரில் யாருடைய திருமணத்திற்க்காவது வீடியோ எடுத்திருந்தால், அவர்களுடைய 'கல்யாண கேசட்' கிடைக்கும் நாள் எங்களுக்கு திருநாள். என்ன ஒரே சிரமம் என்றால், அவர்கள் கல்யாண வீடியோவை முழுமையாக போட்டு விட்டு தான் வேறு சினிமாக்கள் போடுவார்கள். அதுவும், புது பொண்ணோ, மாப்பிளையோ படம்பார்க்க வர தாமதமானால், Black TV ஐ நாங்களும் தேமே என பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
இன்னொன்று, ஊரில் யாரையாவது வெறிநாய் கடித்தால், சம்மந்தப்பட்ட நபர் 90 ஆவது நாள் தூங்கக்கூடாது என்ற நம்பிக்கை ஊரில் இருந்தது. அன்று அந்த வீட்டில் விடிய விடிய படம் ஓடும். மற்ற இடங்களை விட, இந்த கேட்டகிரியில் படம்பார்க்க ஆட்கள் குறைவாக இருக்கும் என்று நான் எழுதி தான் தெரிய வேண்டுமா என்ன? 
இரண்டு வீடுகளுக்கு இடையே இருக்கும் ஈ.கோ வும் இந்த நாட்களில் ஊருக்கு தெரியவரும். அதாவது வெளிநாட்டுக்கு போய் வந்த ஒருவர் 4 படம் போட்டால், அடுத்த வீட்டுக்காரர்கள் சில மாதத்தில் 8 படம் போட்ட வரலாற்றை எல்லாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.
இதை தவிர கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் பெரிய திரை தான். பெரும்பாலும் மதநம்பிக்கை சார்ந்த திரைப்படங்களே அங்கு போடப்படும். என்ன ஒன்று, ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அங்கே கூடுதலாக இருக்கும்.
90 களில், ஒவ்வொரு வீடுகளிலும் தொலைகாட்சி எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற 'விடிய விடிய படம்' கூத்துக்கள் குறைய துவங்கியது. ஊரின் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்புக்கும் ஒரு கிரிக்கெட் டீமும், ஒரு இயக்கமும் ஆரம்பமானது. ஆம், எங்களுக்கும் அந்நேரம் மீசை முளைக்க துவங்கி விட்டது. எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு டீம் துவங்கி, ஆண்டுவிழாக்கள் நடத்தி பெரிய திரையில் சினிமாக்கள் போட துவங்கினோம்.
................
80 களில் அவ்வளவு பரபரப்பாக இருந்த 'சினிமா போடுதல்' 2Kவில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய் விட்டது. சினிமாவின் இடத்தை, பாட்டுக்கச்சேரியும், நடன நிகழ்சிகளும் பிடிக்க ஆரம்பித்தது.
சென்ற வாரம் மக்களோடு, ஒரு தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். பாதிபடம் முடிவதற்குள் தூக்கம் வந்து, தூங்கப்போகிறேன் என்று சொல்லிப்படுத்து விட்டேன். ஒருகாலத்தில் நான்கைந்து படங்களை எப்படி இப்படி சுவாரசியம் குறையாமல் பார்த்தோம் என்பதை நினைக்கும் போதே அயர்ச்சியாக இருந்தது.
ஆனால், அந்த படம்பார்த்த நாட்களின் நினைவுகள் மட்டும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் அப்படியே மனசுக்குள் கிடக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157167983817780

குமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு

குமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களை 'அரை பார்ப்பனர்கள்' என சுட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன். சிலருக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், சில முற்போக்கு CSI நண்பர்கள் அந்த பதிவை Like செய்திருந்தார்கள், உண்மை என்று வாதிட்டார்கள்.
சாதாரண, அடித்தள CSI கிறித்தவ மக்களின் மீது பிராமணிய சாயல் பூசவே இல்லை என்பது எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரியும்.
............
கொஞ்சம் யோசித்து பாருங்கள்,
இந்தியாவின் முதல் மிஷன் மருத்துவமனை 180 ஆண்டுகளுக்கு முன் பழைய திருவாங்கூரில் ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அந்த மருத்துவமனையால் பயன்பெற்றார்கள், பயன் பெறுகிறார்கள். அந்த மருத்துவமனையின் முன்னோடி தலைமை மருத்துவராக இருந்த, மிசனரி Theodore Howard Somervell ன் புத்தகங்களில் இருந்தும், கடிதங்களில் இருந்தும் மருத்துவமனையில் இருந்த அபரிதமான வசதிகள் குறித்து நிறைய தகவல்களை வாசிக்க முடிகிறது.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை, இந்த நேரத்தில் ஒரு பிரமாண்ட மருத்துவக்கல்லூரியாக மாறி இருக்க வேண்டும். ஆனால், பிற்காலத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய உள்ளூர் கிறிஸ்தவ மருத்தவர்கள், அதற்க்கான முட்டுக்கட்டைகளை போட்டார்கள். நிறைய அனுபவங்கள் பெற்றபின் தங்களுக்காக தனித்தனி மருத்துவமனைகளை குமரி மாவட்டம் முழுக்க துவங்கினார்கள்.
நெய்யூர் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகி விட்டால் இவர்களுடைய மருத்துவவியாபாரம் படுத்துவிடும் என்ற முன்யோசனை தான் அதற்க்கு காரணம்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பிற்கால நிர்வாகிகள் கூட, மேற்படி மருத்துவவியாபாரிகளின் அழுத்தத்தால் அமுங்கி போனார்கள்.
............
80 களில், டி.ஜி.எஸ் தினகரன் தனது காந்தக்குரலால் மக்களை கட்டிப்போட, அவரை தூக்கி சுமந்தது குமரி சிஎஸ்ஐ கிறித்தவர்களே. தினகரன் பிரபலமாகி, ஒரு கன்வேன்சனுக்கு ஒருலட்சம் என்று கேட்க ஆரமபித்த பின் அந்த உறவு முறிந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தான், 'ஏழைகளுக்கு கல்லூரி' என்று அடித்தள மக்களிடம் காசு வசூல் செய்து காட்டுக்குள் காருண்யாவை உருவாக்கினார்கள்.
....
இதுபோன்ற ஆட்கள் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டிய நிர்வாகத்தில் இருந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். ஏன்?
வளர்ந்து விட்ட இந்த பெருந்தனவார்களின் கருணையால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்த கல்வி & வேலைவாய்ப்பினால், அவர்களுக்கு எதிராக எங்கேயும் குரல் எழுப்பாமலேயே போனார்கள். இதன் மூலம் சாமானிய CSI கிறித்தவர்களுக்கு இவர்கள் பெரும் துரோகத்தை இழைத்தார்கள்.
இப்போது சொல்லுங்கள் இவர்கள் அரை பார்ப்பனர்கள் தானே.
....................
ஒரு ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் அளவுக்கு இவர்களுடைய அரசியல் கதைகள் குமரியில் இருக்கிறது. என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு இளையதலைமுறை இதை தீர்க்கமாய் பதிவு செய்து கேள்வி கேட்கும்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157319607012780

சாமிக்கு படைத்ததை உணவை ஏன் மறுக்கிறார்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்?

சாமிக்கு படைத்த பொங்கலையும், பலகாரத்தையும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்கள் வாங்க மறுப்பது ஏன்?
----------------------------
மதம் தொடர்பான விவாதம் கொஞ்சம் இணையத்தில் வந்தால் போதும், "கிறித்தவனும், இஸ்லாமியனும் தர்ற பொருட்களை நாம தின்னனும். ஆனா, நாம கொடுத்தா தின்னமாட்டனுங்க... " என பலரும் சமூகவலை தளங்களில் பெருமுவதை பார்க்க முடியும்.
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் SEMITIC RELIGIONS, அதாவது ஒற்றை கடவுளை மையமாக கொண்டு இயங்குபவை. அங்கே, கடவுளுக்கு என்று ஏதும் படைக்கபடுவதும் இல்லை, பூஜிக்கபாடுவதும் இல்லை, அவை ஆராதிக்கப்படுவதும் இல்லை. அப்படி செய்யப்படுபவைகளை பாவமாக, பிசாசுக்கு படைக்கப்பட்டதாக அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. ஒற்றை கடவுள் நம்பிக்கைகளில் வளரும் ஒருவர் அந்த நம்பிக்கையிலே வளர்கிறார். இஸ்லாமியர்க்கு குரானும், கிறிஸ்தவர்களுக்கு பைபிளும் மதநூல்களாக இருக்கிறது.
சரி, இனி இந்து மதத்திற்கு வருவோம். இங்கே யார் இந்து? கிறிஸ்தவ, இஸ்லாமியர் அல்லாத எவரும் இங்கே இந்து தான். முன்னோர் வழிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பவரும் இந்து தான். கல்லை கும்பிடாதே என்று சொன்ன ஐயா வைக்குண்டரும் இந்து தான். நாங்கள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக லட்டு உருட்டுவோம் என்று மிரட்டும் திருப்பதி கோயில் பிராமணரும் இந்து தான்.
இங்கு இருக்கும் பழங்குடி தொன்மமும், பெருதெய்வ வழிபாட்டில் இருந்து சிறு தெய்வ வழிபாடு வரை தொடரும் சில வழிப்பாட்டு கண்ணிகள் தான் இங்கே இந்துக்கள் என்று கோடிக்கணக்கானோரை இணைக்கிறது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக 'இந்தியா' என்ற ஐடியாலஜியின் மீது நின்று அரசியல் செய்கிறது பிராமணீயம். அது இந்துக்களை பிரியவோ, திரியவோ விடாது. இவற்றை எல்லாம் மீறி தான் குமரியில் அய்யாவழியினர், தங்களை தனி மதமாக அறிவிக்க கோருகிறார்கள். கர்நாடகா லிங்கத்தார் பெரும் போராட்டமே 'தனி மதத்திற்காக' நடத்தி வருகிறார்கள்.
கொஞ்சம் ஈழத்தை பாருங்கள். இதே வழிபாட்டு முறைகளை கொண்டுள்ள மக்கள் தங்களை 'சைவம்' என்று சொல்லிக்கொள்கிறார்கள், 'இந்து' என்றல்ல.
.............
ஆக, இங்கே ஒருவர் தன்னை 'இந்து' என்று அடையாளப்படுத்திக் கொள்பவர், தனக்கென்று எந்த தனித்த அடையாளத்தையும், வழிபாட்டு முறைகளையும் வைத்துக்கொள்ளலாம். அதனால் தான், இந்துக்கள் என தங்களை அறிவித்துக்கொள்பவர்களால் எளிதாக தர்க்காவில் போய் மந்திரித்து கட்டிக் கொள்ள முடிகிறது, மாதா கோயிலுக்கு நேர்ச்சை போட்டு மொட்டை போட்டுக்கொள்ள முடிகிறது. Yes, They don't have any rules.
இவர்களை தான் ஹச். ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஒரே குடைக்குள் கொண்டுவர முயல்கிறார்கள்.
"அவர்கள் கோயிலுக்கு போய் நீ சாப்பிடுகிறாய், உன் கோயிலுக்கு அவர்கள் வருவார்களா? அவர்கள் சாமியை நீ கும்பிடுகிறாய், உன் சாமியை அவர்கள் கும்பிடுவார்களா?" என கேள்வி எழுப்புகிறார்கள். தொன்ம அடையாளத்தின் தொடர்ச்சியை 'இந்து' என்று கட்டமைத்திருக்கும் அரசியல் ஹச்.ராசாவுக்கு நன்றாகவே தெரியும்.
ஒற்றை தெய்வ வழிபாட்டில் இருக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிமுறைகளை கேள்விக்கு உட்படுத்துவதின் மூலம் தான் இங்கிருக்கும் சாமானியர்களை அவர்களுக்கு எதிராக திரட்ட முடியும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
இந்த சாமானிய இந்துக்கள் மறந்து போகும் ஒரு சங்கதி ஒன்று இருக்கிறது. அது, இஸ்லாமிய சமூகத்திக்கு உள்ளேயே, 'தர்காக்களை இடிப்போம்' என்பவர்களும் உண்டு, "ரோமன் கத்தோலிக்கர்கள் பிசாசுகளை கும்பிடுகிறார்கள்" என சொல்லும் சீர்திருத்த, பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களும் உண்டு. இவர்களுக்கு ஒன்றும் செவிசாய்க்காமல் வருடாவருடம் சர்சுகளில் பொங்கல் இடுபவர்களும் இதே கத்தோலிக்கர்கள் தான்.
தர்க்காவுக்கு செல்லும் இஸ்லாமியரும், சர்ச்சில் பொங்கல் வைத்து கொண்டாடும் கிறிஸ்தவரும், குலசாமி வழிபாட்டில் தனது பண்பாட்டை தக்கவைத்திருக்கும் இந்துவும் ஒற்றுமையாக இங்கே இருப்பதால் தான் இந்த மண் இன்னும் கலவரபூமியாக மாறாமல் இருக்கிறது.
ஆக, இங்கே ஒற்றை கடவுளை மட்டுமே கொண்டாடும் செமிடிக் மதத்தவர் சிறுபான்மையிலும் சிறுப்பான்மை. அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதில், கண்டிப்பதில் தவறே இல்லை. ஆனால், அவன் என் கோயிலில் சமைத்ததை ஏன் சாப்பிடவில்லை எனக் கோருவது, 'ஒரு சாமானியர் சமைத்த மாட்டுக்கறியை இந்த அக்ரகாரத்து ஆள் ஏன் சாப்பிட மாட்டேங்குறார்?' என்று கதறுவது போன்றது.
முரண்பாடுகளை பேசிக் களைந்து, இது போல என்று இணைத்து செயல்படுவோம்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157327944337780

முகிலனின் கதை

முகிலன்---> முகிலன்விளை
குமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் பெயர்களை ஆழ்ந்து கவனித்ததுண்டு. ஒவ்வொரு ஊரின் பெயர் காரணங்களை சொல்லித்தர வேண்டிய மூதாதைய கண்ணிகள் எப்போதோ அது தொடர்பான நினைவுகளை தவற விட்டிருக்கிறார்கள். தம்பி பால் பெக்கர், வெகு சமீபத்தில் முகிலன் தொடர்பான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த பதிவை எழுகிறேன்.
................................
காலம் : 1680, தில்லியில் சுல்தானாக அவுரங்கசீப் இருக்கிறார். இந்தியா முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்ட வர, அவுரங்கசீப் தொடர்ந்து போர்கள் செய்து வருகிறார். தெற்க்கே இருக்கும் சில நிலப்பகுதிகள் அவருக்குள் கீழ் வராமல் இருப்பதை அறிந்த அவர், வேணாடு (திருவான்கூருக்கு முந்தைய பகுதி) நோக்கி செல்ல தனது நம்பிக்கையான தளபதியை கட்டளையிடுகிறார். அந்த தளபதி தான் முகிலன் (அவர் பிறப்பால், மதுரையை சார்ந்த தமிழர் என்றும், பிறகாலத்தில் இஸ்லாமிய சமயத்தை தழுவி அவர்கள் போர் படையிலேயே இணைத்தார் என்பது செவிவழி வரலாறு).
வேணாடோ, 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' போல, உள்ளூர் ஆட்சியாளர்களில் கைகளில் இருக்கிறது. ஆற்றிங்கல் ராணியாக உமையம்மை ராணி இருக்கிறார்.
வழியில் இருக்கும் சிறுகுறு அரசுகளை எல்லாம் வீழ்த்தி வரும் முகிலன், வேணாட்டு அரசை எளிதாக கைப்பற்றுகிறார். இங்கே கைப்பற்றப்பட்ட பொருட்களில் சிலவற்றை அவுரங்கசீப்புக்கு பரிசாக அளித்து விட்டு, 'வேணாட்டு ராஜா'வாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.
முகிலனை வெல்லவே முடியாது என்று எண்ணும், உமையம்மா ராணி, கோட்டயம் பகுதியில் ராஜாவாக இருக்கும் கேரளவர்மனிடம் உதவிகள் கேட்கிறார். முகிலனின் படைபலத்தை கண்டு திகைக்கும், கேரளவர்மன் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேர்ச்சை வைத்து வழிபடுகிறார்.
திருவட்டாறு அருகே உள்ள மலை பகுதியில் போர் நடக்கிறது, போர் உச்சத்தை தொடும்போது குழவிகள் முகிலனின் படைகளை தாக்குகிறது. முகிலனின் படைகள் பின்வாங்கி காட்டில் போய் மறைகிறது. குளவிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முகிலன் காட்டிலேயே இறந்து போகிறார். முகிலனை அந்த பகுதியிலே அடக்கம் செய்து விட்டு படைகள் திரும்ப போகிறது. (திருவட்டாறு அருகே அவரது கல்லறை இருப்பதாக தகவல்- நான் பார்த்ததில்லை)
..........................
இப்படி ஒரு குறுகியகாலத்தில் வேணாட்டை கைப்பற்றி தன்னை ராஜாவாக பிரகடனம் செய்துக்கொண்ட முகிலனை பற்றிய தகவல்கள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுவாரசியமாக 'முகிலன்' ஆண்டதற்கும், இருந்ததற்கும் சாட்சியாக குமரி முழுக்க முகிலன் என்ற பெயரோடு தொடங்கும் ஊர்கள் உள்ளன.
சில உதாரணங்கள்,
முகிலன் விளை - மிடாலக்காடு
முகிலங்கரை - மணலிக்கரை
முகிலன்விளை - இருளப்பபுரம்
முகிலன்குடியிருப்பு - கன்னியாகுமரி - மணக்குடி சாலை
*விளை என்பது விளைநிலங்கள் உள்ள பூமி என்று குறிப்பதாகும்.
...............
முகிலன் ஒரு தமிழர் என்பதால், அவர் தொடர்பான வரலாறு மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
முகிலன், முகிலன்விளை தொடர்பான செய்திகள் நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157334098687780