Saturday, November 26, 2016

ட்ரம்ப் என்ற 'வந்தேறி' !?

1885, தனது பதினாறாவது வயதில் ப்ரேடரிக் ட்ரம்ப் ஜெர்மனியில் இருந்து நியூயார்க் வந்து ஒரு முடி திருத்துனராக பணி புரிகிறார். சில வருடங்களில், தான் சேமித்த பணத்தை வைத்து, சியாட்டில் நகரில் ஒரு சிற்றுண்டி உணவகம் ஆரம்பிக்கிறார். சரியாக ஏழு ஆண்டுகள் கழித்து, 1892 ஆம் வருடம் அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கிறது. உணவகத்தோடு மட்டுமல்லாது பெண்களை வைத்தும் தொழில் செய்ய, கைகளில் பணம் புரள்கிறது. மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, தனது 32 ஆவது வயதில் பெரும்செல்வந்தராக ஜெர்மனி திரும்புகிறார்.
ஜெர்மனியில் எலிசபத் என்ற பெண்மணியை திருமணம் செய்து மீண்டும் அமெரிக்கா திரும்புகிறார். எலிசபத்துக்கோ நியூயார்க் பிடிக்கவில்லை; போதாததுக்கு அவருடைய வீட்டு நினைவுகள் வாட்டி எடுக்க, 1904ல் தம்பதியாக மீண்டும் ஜெர்மனி திரும்புகிறார்கள். சில மாதங்களில், ட்ரம்ப் ஜெர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கிறார். அவர் தங்கிருந்த நகரின் குடியுரிமை அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, "மூன்று மாத காலத்துக்குள் ஜெர்மனியை விட்டு வெளியேறிட வேண்டும்" என்று எச்சரிக்கை கடிதம் அளிக்கின்றனர்.
ட்ரம்ப், பவேரியா மாகாணத்தின் அரச குடும்பத்திடம் கோரிக்கை வைக்கிறார், அங்கேயும் அவரது கோரிக்கை நிராகரிக்கபடுகிறது. தோன்றுபோன மனநிலையோடு, ஜூலை 1, 1905 ஹாம்பர்க் துறைமுகத்திலிருந்து எலிசபத்தும்-ட்ரம்பும் நியூயார்க்குக்கு கப்பல் ஏறுகின்றனர். சரியாக மூன்று மாதம் கழித்து, ப்ரேடரிக் ட்ரம்ப் ஜூனியர் பிறக்கிறார். அட, அதாங்க நம்ம டொனால்ட் ட்ரம்போட அப்பா..
டெயில்பீஸ் : டொனால்ட் ட்ரம்போட தாத்தா, ஏன் ஜெர்மனியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது, என நான் சொல்லவே இல்லியே?. அந்த காலத்தில் பவேரியா மாகாணத்தில், கட்டாய ராணுவ பணி இருந்தது. அதிலிருந்து தப்பிக்கவே, தாத்தா ட்ரம்ப் நியூயார்க் ஓடி செல்கிறார்.
நாட்டுக்கு செய்யவேண்டிய கடமையை சரிவர செய்யவில்லை என்று, ஜெர்மனியிலிருந்து துரத்தப்பட்ட ஒரு மனிதரின் பேரன், இன்று தனது நாட்டில் இருந்து சிறுபான்மையினரை துரத்துவேன் என சொல்லி ஆட்சியை கைப்பற்றி இருப்பது தான் வரலாற்று சுவாரசியம்.

No comments:

Post a Comment