Friday, December 18, 2009

அன் அவைலபிள்............




கடல், யானை, ரயில் - எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வியங்களாக நாம் குறிப்பிடுவது இந்த மூன்றையும் தான். முன் இரண்டையும் விட பாரதத்தில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கிறது ரயில். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வியங்களில் ரயில்வே துறையும் ஒன்று.பல உலக நாடுகளின் அளவுக்கு அதனுடைய வளர்ச்சி இல்லாமல் இருந்தாலும், 1.4 மில்லியன் ஊழியர்களை கொண்டது இந்திய ரயில்வே துறை. இங்கே சுமார் 20 மில்லியன் மக்கள் ரெயிலை தினமும் போக்குவரத்திற்காக பயன் படுத்துகிறார்கள்.

கடந்த நவம்பர் 11 முதல் 20 வரை மட்டும் ரயில்வே துறையின் வருவாய் சுமார் 2100 கோடி ரூபாய். சில மாதங்களுக்கு முன் இந்த பணம் கொழிக்கும் துறையை கைப்பற்ற இரு மாநில கட்சிகள் குடுமி பிடி சண்டை போட்டது நாடறிந்த விஷயம்.

எந்த ஒரு துறையும் மாறி வரும் தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்ப ஈடு கொடுக்க முடிந்தால் மட்டுமே அசுரத்தனமான வளர்ச்சியை பெற முடியும். உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டின் தேவைக்கு ஏற்ப ரயில்கள் இருகிறனவா என கேள்வி எழுப்பினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதன் தரம் பயணிகளின் முகத்தை சுளிக்க வைப்பதாகவே உள்ளது. கேண்டீனில் இருந்து கழிவறை வரை ரயில்வே துறையுனரின் சேவை குறைபாடுகள் அப்பட்டமாய் தெரிகிறது.

கேரளாவில் பணி புரியும் குடும்ப நண்பர் ஒருவர் என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இரண்டு நாட்களில் திரும்பி செல்ல வேண்டி இருந்ததால், ஆன்லைனில் தக்கால் டிக்கெட் ஒன்றை முன் பதிவு செய்ய சொன்னார். எளிதான காரியம் தானே என காலையிலேயே ரயில்வேயின் ஆன்லைன் புக்கிங் தளமான http://www.irctc.co.in இல் லாகின் செய்து விட்டு 8 மணி ஆகட்டும் என காத்திருந்தேன்.

அதுவரை ஒழுங்காய் வேலை செய்து வந்த இணையதளம் 8:00 மணி ஆனதும் முடக்கப்பட்டது. சுமார் 100 முறை திறந்து, மூடியும் வெவ்வேறு ப்ரௌசெர்களை உபயோகித்தும் ம்ம்... ஹும். 'சர்விஸ் அன் அவைலபிள்' என்ற செய்தி மட்டும் ஒரே அடியாய் மின்னி கொண்டு இருந்தது.


நீண்ட முயற்சிக்கு பின் சுமார் 8:30மணிக்கு இணையதளத்தில் உட் புக முடிந்தது. எல்லா விவரங்களையும் கொடுத்து ரயில் முன் பதிவு நிலவரத்தை பார்த்த போது அதிர்ந்து விட்டேன். ஆம் எல்லா இருகைகளும் முன் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து அந்த ரயிலில் முன் பதிவு செய்ய முடியாத படி தடை செய்யப்பட்டு இருந்தது.

மிகுந்த குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன் என்று தான் சொல்ல வேண்டும். பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி மட்டும் என்னையே சுற்றி சுற்றி வந்தது... "என்னை போல் தானே மற்றவர்களுக்கும் 'சர்விஸ் அன் அவைலபிள்' என்ற செய்தி வந்திருக்கும், அப்படி இருக்கும் போது எப்படி அரை மணி நேரத்தில் ரயிலின் அத்தனை இருக்கைகளும், முன் பதிவு செய்யப்பட்டிருக்கும்". ஆனால் இந்த விபரங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள ???.. ம்ம்.. ஹூம்...பண்டிகை நேரம் ஆனதால் கேரளா செல்லும் அனைத்து பேருந்து இருக்கைகளும் முன் பதிவு செய்யப்பட்டு விட்டது. இனி கேரளா செல்ல வேண்டுமானால் ரயிலில் முன்பதிவு செய்யாமல் தான் செல்ல வேண்டும் என முடிவு எடுத்து இரண்டு நாட்கள் காத்திருந்தோம்.

நண்பர் கிளம்பும் அன்று வெகு சீக்கிரமாகவே ரயில்வே நிலையம் சென்று, முன் பதிவு செய்யாத பயண சீட்டு வாங்கி விட்டு ரயில் நடை மேடைக்கு வரும் வரை காத்திருந்தோம். எதோச்சையாய் என் கல்லூரி தோழன் ஒருவன் வர, அவனும் என் நண்பர் செல்லும் அதே ரயிலை பிடிக்க தான் வந்திருக்கிறார் என தெரிந்தது. ரயில் டிக்கெட்டை எப்படி முன் பதிவு செய்ய முடிந்தது என அப்பாவித்தனமாகவும், ஆச்சரியத்துடனும் கேட்டேன். அவன் ஒரு மென் சிரிப்பை உதிர்த்து விட்டு சொன்னான் ' தான் எஜன்ட் வழியாக டிக்கெட் முன் பதிவு செய்ததாகவும், எப்போதும் அவ்வாறே செய்வதாகவும் அதனால் தான் தன்னுடைய பயணங்கள் எப்போதுமே தடங்கல் இல்லாமல் செல்வதாகவும் கூறினான். அவனுடைய பயண சீட்டை வாங்கி பார்த்தேன் உண்மை தான், ஏறக்குறைய நாங்கள் முன் பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரம் அவனுடைய பயண சீட்டு முன் பதிவு செய்ய பட்டிருந்தது....ரயில் கட்டணத்தை விட ஏறக்குறைய 150 ரூபாய் அதிகமாக கொடுத்திருக்கிறான்.

பெரும் கோபமும் வருத்தமும் கொண்டேன். முன்பதிவு என்பது இரு பிரிவினருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் ஏஜண்டுகள் எனப்படும் தனி முதலாளிகள் வளர மற்ற சாமானியர்கள் சுரண்டப்படுவது தான் வேதனை. இப்படி முதலாளித்துவத்தின் அடிவருடியாய் இருக்கும் நிலையை களைய அரசாங்கம் என்ன செய்ய போகிறது என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

8 comments:

  1. போன வாரம் இதே கதை எனக்கும் நடந்தது. எல்லோரும் இதற்கு பழகி விட்டார்கள் என நினைக்கிறேன். நீங்கள் பதிவு செய்ய முயற்சித்தது சபரி எக்ஸ்பிரஸா?

    ReplyDelete
  2. I have also faced the same problem in peak season(pongal,dewali. Sure . they are doing game.

    ReplyDelete
  3. //ஆனால் ஏஜண்டுகள் எனப்படும் தனி முதலாளிகள் வளர மற்ற சாமானியர்கள் சுரண்டப்படுவது தான் வேதனை. இப்படி முதலாளித்துவத்தின் அடிவருடியாய் இருக்கும் நிலையை களைய அரசாங்கம் என்ன செய்ய போகிறது என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.//

    அதிகம் கவலைப்படாதீர்கள்..ஸ்டாலின்..
    அரசாங்கம் ஒன்றும் செய்யாது... அதுவே...முதலாளித்துவத்தின்.. ஹெட்- குவார்டர்ஸ்..
    அதன் விசுவாசிகளான முதலாளிகள்...இன்னும் இன்னும் கொழிக்க...நீங்களும் நானும் நிச்சயம் சுரண்டப்பட்டே ஆகவேண்டும்..
    அது ஒரு சிஸ்டம். இல்லையென்றால்...அது இயங்காது..
    இதில் வேதனைப் பட என்ன இருக்கிறது..?
    ஊருக்கு போகவேண்டுமென்றால்...விடியக்காத்தால...லைன்ல போயி ஒரு துண்டப் போட்டுற வேண்டியது தான்..
    ' நாசமாய் போகட்டும் இந்த நாடும் நாட்டுமக்களும்..' - தீர்க்கதரிசனமான வசனத்தை எழுதிட்டு தான்..தீர்மானமா நாற்காலில உக்காந்துட்டாங்க.. போல...
    அவங்க லைன்ல போட்டத் துண்டு...ரொம்ப ஸ்ட்ராங்..நண்பா..!!!
    :)

    ReplyDelete
  4. என்னத்த சொல்ல இது இந்த நாட்டுக்கே உரித்தான சாபக்கேடு.
    காசை கடவுளாக காணும் அற்ப மனிதர்களுக்கு இடையே நடக்கும் அநியாயங்களை கண்டு கோபம் கொள்ளும் இந்த சிந்தனை ஏனோ ஒரு துளி கூட பொறுப்பில் வகிக்கும் நபர்களுக்கு வருவது இல்லை வந்தாலும் கிம்பளம் கண்ணை முடி கொள்ள சொல்லும்!
    வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் சாவது தான் காலம் காலமாக நடக்கிறது
    புரட்சி எப்போது பிறக்குமோ அப்போதுதான் ஒரு துளி மாற்றம் இங்கு காண முடியும்.
    அப்போது கூட அதை ஒடுக்கத்தான் இந்த அரசாங்கம் சிந்திக்குமே தவிர ஒரு விநாடி கூட தவறை தடுக்க சிந்திக்காது. என்னில் தப்பானவர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையாக கொண்ட அரசாங்கம் தன்னோடு இணையும் சிந்தனை வாதியை கூட சாக்கடையில் உழன்று பார்க்க வைக்கும் !புதிதாய் தான் கடவுள் பூமியை படைக்கணுமோ என்னவோ?

    ReplyDelete
  5. Yes you are right. the prob is due to money minded capitalists, inhuman-beings, silent spectators like us.

    ReplyDelete
  6. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ராஜா, சிவா, இளங்கோ,சேக்,ரவி, ஜனா

    ReplyDelete
  7. வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

    ReplyDelete