Saturday, October 28, 2017

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து

"அப்பா, உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்", - நான்.
"முன்னாடி சிவாஜி, இப்போ கமல்", -அப்பா.
இந்த உரையாடல் நடத்து சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை கமல் எனக்கு பிடித்தமான நடிகர் (கவனிக்க 'ஆதர்சமான' ஹீரோ அல்ல). நாயகன்-க்கு பிறகு கமலின் எந்த திரைப்படத்தையும் தவற விட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
சென்னை வந்த பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 'பஞ்சதந்திரம்' படபிடிப்பு நடக்கிறது என்றதும், SRM கல்லூரி மதில் சுவர் தாண்டி, கமலை பார்த்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.
புத்தக வாசிப்பு தொடர அவர் மீதான விமர்சனம் முதன்முதலாக என்னுள் எழுகிறது.
ஒருகாலத்தில் சிலாகித்து பார்த்த குருதிபுனல்-ல் இருந்து பின்பு வந்த 'உன்னை போல் ஒருவன்','விஸ்வரூபம்' வரைக்கும் கமலோடு முரண்படுகிறேன். ஈழ வீழ்ச்சிக்கு பின்னால் கமலில் சில நிலைப்பாடுகள்(குறிப்பாக IIFA பங்கேற்ப்பு தொடர்பாக) இந்த முரண்பாடுகளை இன்னும் கூர்மையாக்குகிறது.
இனி நிகழ்காலத்துக்கு..
நான் சிவப்பாக்கும் என சொல்லி விட்டே நான் கறுப்பாக்கும் என இன்னொரு பக்கம் கால் வைப்பது எல்லாம் அயோக்கியத்தனம் அல்ல; அவர் உள்வாங்கிய அரசியலில் உள்ள முரண். தேர்ந்த ஒரு வாசகரான கமல், தமிழ் சமூகத்தின் கடந்து வந்த காலத்தை பற்றி கற்று வைத்திருக்கிறார். ஆனால், சமூக உரையாடல் அற்றுப் போன ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்ததாலையே என்னவோ தான் "நீட்" என்றால் என்னவென்றே அறியாமல் அவரை ஒரு டிவிட் போட வைத்தது.
கருப்பு-சிவப்பு அரசியலை மட்டும்பேசிக்கொண்டிருப்பது ஓட்டு ஆகாது என்பது அவருக்கு புரிந்திருக்கிறது. 'ஊழல் ஒழிப்பேன்' 'காவியும் கருப்புக்குள் அடக்கம்' 'டிமானிடைசேசன்' 'யோகி' என அவர் உதிர்த்த கருத்துகள் எல்லாம் கறுப்புக்கும் சிவப்புக்கும் இடையே அவர் இட்ட "யார்க்கர்".
'முதுகெலும்பு அற்றவர்' 'எலும்பு சிகிச்சை நிபுணர்' என ஹச்.ராஜாவுடனான சர்ச்சைகளுக்கு பின் கமலின் சத்தம் குறைய ஆரம்பித்ததற்கு காரணம் பிஜேபி அல்ல, அது 'வேறொன்று'.சமூக பிரச்சனைகள் எதையும் பேசாமல் ஊழலை ஒழிப்பேன் என வெகுஜன மக்களை திசை திருப்புவதற்கும் அது தான் காரணம்.
........
நன்கு தெரிந்த ஐயங்கார் நண்பர் அவர். ஜெயலலிதா 69% இடஒதுக்கீடு நேரமும், சங்கராச்சாரியாரின் கைது நேரமும், ஜெயாவை கடுமையாக சாடியவர். ஆனால், ஜெயா மரிக்கும் வரை அவருக்கு தான் ஓட்டு இட்டார். காரணம் 'அது'.
உடனடியாக காவி ஆட்சி தமிழகத்தில் வந்திடாது. ஆனால், இந்தியா-தமிழ் இரண்டையும் சமநிலையில் கொண்டு போகும் ஆள் 'அதற்க்கு' தேவை. அதற்க்கான தற்போதைய துருப்பு சீட்டு தான் கமல்.
சரி அது என்ன 'அது' என கேட்கிறீர்களா? புத்தனையும், அம்பேத்கரையும், ஐயா வைகுண்டரையும் உள்வாங்கியிருக்கும் அதன் பெயர் 'பிராமணியம்'.
அது கமலையும் தின்று செரிக்கும்.
நாம், நாம் வழக்கம் போல சாதி மைதானத்தில் நடக்கும் போட்டியை வேடிக்கை பார்ப்போம்..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155970919917780

No comments:

Post a Comment