Tuesday, February 17, 2009

நேற்று... இன்று... நாளை...

மெல்லிய பனித்திரையாய் விரிந்தன
நேற்றைய நாட்கள் என் மனதோரம்
மார்கழியின் குளிரையும் மீறி
சூரியன் சிரிக்காத ஆறரை மணிக்கெல்லாம்
ஐக்கியமாகி விடுவோம் குளக்கரை ஓரம்.....
ஐந்து மயிலுக்கு அப்பால் ஊதும்
ஆலை யின் ஓசை கேட்ட பின்
உண்மை உறைக்க ஓடுவோம் பள்ளிக்கூடம்
உலராத தலைமுடியுடன்.......

நேற்றைக்கு எடுத்த பாடத்திற்கு
இன்று பெரம்பு அடி
பக்கத்தில் இருக்கும் கவிதாவிடம்
மிரட்டி பறித்த புது பென்சில் குச்சு
இடைவேளைகளில் ஐஸ் தாத்தா கொடுத்த
உடைந்த ஐஸ் துண்டுகள்
மத்தியான கடும் வெயிலில்
தள்ளு முள்ளு நடத்தி வாங்கிய சத்துணவு!!!!
பாட வேளையில் தூங்கியதிற்காய் அவமானம் பொங்க
பெஞ்சு மேல் ஏறி நிற்க வைத்த தண்டனை
என பள்ளி கூட பொழுதுகள் போக
புதையுண்டோம் மாலை நேரம் கிராமத்து விளையாட்டுகளில்......

அடை மழை காலங்களில் பறித்த காளான்
விடுமுறை நாட்கள் பிடித்த தும்பி
தெருகடையில் வாங்கி தின்ற தேன்மிட்டாய்
நண்பானோடு கட்டி விளையாடிய செம் மண்வீடு
என காலங்கள் உருண்டோட
காணாமல் போனேன் எனை வளர்த்து எடுத்த
பாட்டியின் மறைவுக்கு பின்.....
ஆம்.......
பெற்றோரின் முகம் பார்க்க
பாக்கியம் இல்லாதவனை
பக்குவமாய் விழிகளுக்குள் சுமந்தவள்
நெடும் வழி நடுவில் எனை விட்டு செல்ல
கரம் பற்றி இழுத்தது அனாதை விடுதி
என் கிராமத்து அத்தியாயம் முடிந்தது அன்றோடு....

"காபி குடிங்க" என மனைவி சொல்ல
ஏழு கடலும், மலையும் தாண்டி
இரண்டு தேவதைகளை மக்களாய் பெற்று
ஐம்பது வயதை கடந்த பெருத்த உடலோடு
இன்றைய நாளுக்குள் வந்தேன்...

"தமிழகத்தில் வெள்ள அபாயம்" என
தலைப்பு கோடிட்டீருந்த இணையதள பத்தியை
மேம்போக்காய் நான் மேய
கண்ணிலே குருதி வழிந்தது
எனது ஊரின் பெயர் கண்டு!
கிராமமே தண்ணீரில் மிதப்பதாய்
செய்தி சொல்ல - என்
இமைகள் கண்ணீரில் மிதந்தது....

கால் நூற்றாண்டாய் கிராமமே செல்லாதவன்
இன்று அழுது என்ன பயன்
அறிவும், அனுபவமும் என்னுள் விதைத்த
என் மண்ணிற்கு பதில் என்ன செய்தேன் ?
நான் கிளை விட்டது அயல் நாடு ஆகிணும்
எனது வேர்களை எப்படி மறந்தேன்???
காசே கடவுள் ஆகி விட்ட கலி காலத்தில்
மனைவியும், மக்களும் முன் நிற்க
மறந்தே போனேன் மொத்தமாய் கிராமத்தை....

கொலையும், களவும் மட்டுமா குற்றம்
முதல் சுவாசம் தந்த புண்ணிய பூமியை
புறம்தள்ளி செல்வதும் குற்றமே
இந்த குற்றவாளிக்கு
நாளை என்பது நிரந்தரம் இல்லை
ஆயினும் நாட்கள் கூடுமெநின் என்றேனும்
தேடி பார்க்க கூடும்
என் கிராமத்து வாசத்தில்
நான் தொலைத்த இதயத்தை.................

No comments:

Post a Comment