19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியம் (SITA Under the Ashoka Tree). பிராமணிய தொகுப்பின் நீட்சியான ரவி வர்மா, தென்இந்தியர்களை குரங்காகவும், கருப்பாகவும் வரைந்ததில் ஆச்சரியமில்லை. (நாம் கருப்பர்கள் தான் என்பது வேறு விசயம்).
...........
இங்கிருக்கும் எல்லா மதநம்பிக்கைகளையும் ஆராய்ந்து பதிவு செய்கிறார். இயற்கை வழிபாடு, நாட்டாரியல் வழிபாடு என எல்லாவற்றையும் பதிவு செய்யும், 'ராவண விழா' ஒன்று ஆண்டுதோறும் மதுரைக்கும் கீழே கொண்டாடப்பட்டதை பதிவு செய்கிறார்.
அதாவது, ராவணன் சீதையை கடத்திவந்த நாளை வருடம் தோறும் 'ஆடி அம்மாவாசைக்கு அடுத்தநாள் ' கொண்டாடியதாக குறிப்பிடுகிறார். மற்றொரு குறிப்பில், ராமனை demon யாக மக்கள் முன்வைத்து வழிபட்டதாகவும் பதிவு செய்கிறார்.
............
'ராவணன் ஜலதோஷம் வந்தா எந்த கை எடுத்து சீந்துவான்?' என்ற கடி ஜோக்குகளை கேட்டு வளர்ந்த எங்களுக்கு, 300 வருடங்களுக்கு முன் அவன் ஒரு வழிபாட்டு மரபினனாக இருந்திருக்கிறான் என்பது ஒரு ஆச்சரியமான செய்தியே.
காலம் இப்படி தான், வரலாற்றை தொலைந்தவர்களின் நீட்சிகள், அது தொலைந்த இடத்தில் இருந்தே புதுப்பிப்பார்கள்.
#திருவாங்கூர்_குறிப்புகள்
# Edited
Monday, February 11, 2019
Sunday, February 10, 2019
பால்ய கால (ஊர்) சினிமாக்கள்
'படம் போடுன்மாம்', இந்த வார்த்தைகளை கேட்டால் காதில் தேன் வடிந்தது போல இருக்கும். 80 களில் ஊரில் எங்காவது ஒரு வீட்டில் டிவி இருந்தாலே ஆச்சரியம். அதுவும், தமிழ் சினிமா எல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'மாநில மொழி திரைப்படம்' வகையில் வந்தால் தான் உண்டு. அன்று பார்த்து மின்சாரம் போய் விட்டால், மீண்டும் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும். 'மலையாளம்' எல்லாம் அன்று தொலைக்காட்சி வழியாக கற்றது தான்.
இந்த காலக்கட்டத்தில் தான் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற ஊர் அண்ணன்கள் வீடுகளுக்கு டி.வியோடு திரும்பி வர துவங்கினார்கள் சிலர் 'டெக்' கோடு.கொண்டுவந்த டிவியை ஊருக்கு காட்ட போடுகிறார்களா? சுயபெருமிதத்திற்காக போடுகிறார்களா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், எங்களை போல வாண்டுகளுக்கு அது தான் "ஜாக்பாட்". பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவோ, சனிக்கிழமையோ படம் போடுவார்கள். இரண்டு பேருக்கு தெரிந்தால் போதும், ஒரு 100 பேராவது கூடி விடுவார்கள். போடப்படும் படங்களின் பெயர்களும் எப்படியாவது கசிந்துவிடும். குறைந்தது 4,5 கேசட்டுகள் என்று விடிய விடியப் படம் போடுவார்கள். அதும் திரைக்கு வந்து சில வருடங்களே ஆன திரைப்படங்கள். ரஜினியின் 'மாப்பிள்ளை, பணக்காரன்' எல்லாம் இப்படி தொலைக்காட்சியில் போடப்பட்டு பார்த்த திரைப்படங்கள் தான்.
இரண்டு படங்கள் ஓடி முடியும் முன்பே கண்கள் சொக்கும், அடுத்தநாள் படம்பார்க்க வராத நண்பர்களிடம் தம்பட்டம் அடிப்பதற்காகவே கண் சிவக்க சிவக்க படம் பார்ப்போம். நாம் விரும்பிய படத்தை நான்காவதாக போடுகிறார்கள் என்றால், கூடவே இருக்கும் நண்பர்களிடம் அந்த படத்தை போடும் போது எழுப்ப சொல்லி அப்படியே தரையில் கிடந்து உறங்கிய நாட்களும் உண்டு.
இப்படியெல்லாம் படம்பார்க்க அனுமதியெல்லாம் வீட்டில் எளிதாக கிடைத்து விடாது. ஊரின் நம்பிக்கையான ஒரு அண்ணன் யாராவது அந்த இரவுநம்மை 'கார்டியனாக' ஏற்றுக்கொள்கிறேன் என சொல்லி ஜாமீன் அளித்து, அந்த வார இறுதியின் வீட்டுப்பாடங்கள் எல்லாம் செய்து முடித்து ஒப்பித்தால் தான் அனுமதி கிடைக்கும். சினிமா போடும் நாட்களுக்கு ஒருவாரத்திற்கு முன் 'Progress Report' கிடைத்திருந்தால், உள்ளதும் போச்சு; போய் கேட்கவே முடியாது. 'எப்படா மீசை முளைக்கும்! தனியாக போய் படம் பார்க்கலாம்' என்று நினைத்து அழுதுக்கொண்டே தூங்கி விடுவோம்.
வெளிநாட்டுக்கு போய் வந்தவர்கள் கொண்டு வந்த டி.வி தவிர்த்து, வாடகைக்கு டி.வி எடுத்து போடுவார்கள் இளந்தாரிகள். முந்தையதை போல இந்தவகை சினிமா பார்பதற்கும் அதே மவுஸ் என்றாலும் சில நேரம் 'காசு கேட்கும்' அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இன்னொன்று, ஊரில் யாருடைய திருமணத்திற்க்காவது வீடியோ எடுத்திருந்தால், அவர்களுடைய 'கல்யாண கேசட்' கிடைக்கும் நாள் எங்களுக்கு திருநாள். என்ன ஒரே சிரமம் என்றால், அவர்கள் கல்யாண வீடியோவை முழுமையாக போட்டு விட்டு தான் வேறு சினிமாக்கள் போடுவார்கள். அதுவும், புது பொண்ணோ, மாப்பிளையோ படம்பார்க்க வர தாமதமானால், Black TV ஐ நாங்களும் தேமே என பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
இன்னொன்று, ஊரில் யாரையாவது வெறிநாய் கடித்தால், சம்மந்தப்பட்ட நபர் 90 ஆவது நாள் தூங்கக்கூடாது என்ற நம்பிக்கை ஊரில் இருந்தது. அன்று அந்த வீட்டில் விடிய விடிய படம் ஓடும். மற்ற இடங்களை விட, இந்த கேட்டகிரியில் படம்பார்க்க ஆட்கள் குறைவாக இருக்கும் என்று நான் எழுதி தான் தெரிய வேண்டுமா என்ன?
;-)
இரண்டு வீடுகளுக்கு இடையே இருக்கும் ஈ.கோ வும் இந்த நாட்களில் ஊருக்கு தெரியவரும். அதாவது வெளிநாட்டுக்கு போய் வந்த ஒருவர் 4 படம் போட்டால், அடுத்த வீட்டுக்காரர்கள் சில மாதத்தில் 8 படம் போட்ட வரலாற்றை எல்லாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.
இதை தவிர கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் பெரிய திரை தான். பெரும்பாலும் மதநம்பிக்கை சார்ந்த திரைப்படங்களே அங்கு போடப்படும். என்ன ஒன்று, ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அங்கே கூடுதலாக இருக்கும்.
90 களில், ஒவ்வொரு வீடுகளிலும் தொலைகாட்சி எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற 'விடிய விடிய படம்' கூத்துக்கள் குறைய துவங்கியது. ஊரின் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்புக்கும் ஒரு கிரிக்கெட் டீமும், ஒரு இயக்கமும் ஆரம்பமானது. ஆம், எங்களுக்கும் அந்நேரம் மீசை முளைக்க துவங்கி விட்டது. எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு டீம் துவங்கி, ஆண்டுவிழாக்கள் நடத்தி பெரிய திரையில் சினிமாக்கள் போட துவங்கினோம்.
................
................
80 களில் அவ்வளவு பரபரப்பாக இருந்த 'சினிமா போடுதல்' 2Kவில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய் விட்டது. சினிமாவின் இடத்தை, பாட்டுக்கச்சேரியும், நடன நிகழ்சிகளும் பிடிக்க ஆரம்பித்தது.
சென்ற வாரம் மக்களோடு, ஒரு தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். பாதிபடம் முடிவதற்குள் தூக்கம் வந்து, தூங்கப்போகிறேன் என்று சொல்லிப்படுத்து விட்டேன். ஒருகாலத்தில் நான்கைந்து படங்களை எப்படி இப்படி சுவாரசியம் குறையாமல் பார்த்தோம் என்பதை நினைக்கும் போதே அயர்ச்சியாக இருந்தது.
ஆனால், அந்த படம்பார்த்த நாட்களின் நினைவுகள் மட்டும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் அப்படியே மனசுக்குள் கிடக்கிறது.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157167983817780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157167983817780
குமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு
குமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களை 'அரை பார்ப்பனர்கள்' என சுட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன். சிலருக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், சில முற்போக்கு CSI நண்பர்கள் அந்த பதிவை Like செய்திருந்தார்கள், உண்மை என்று வாதிட்டார்கள்.
சாதாரண, அடித்தள CSI கிறித்தவ மக்களின் மீது பிராமணிய சாயல் பூசவே இல்லை என்பது எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரியும்.
............
கொஞ்சம் யோசித்து பாருங்கள்,
............
கொஞ்சம் யோசித்து பாருங்கள்,
இந்தியாவின் முதல் மிஷன் மருத்துவமனை 180 ஆண்டுகளுக்கு முன் பழைய திருவாங்கூரில் ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அந்த மருத்துவமனையால் பயன்பெற்றார்கள், பயன் பெறுகிறார்கள். அந்த மருத்துவமனையின் முன்னோடி தலைமை மருத்துவராக இருந்த, மிசனரி Theodore Howard Somervell ன் புத்தகங்களில் இருந்தும், கடிதங்களில் இருந்தும் மருத்துவமனையில் இருந்த அபரிதமான வசதிகள் குறித்து நிறைய தகவல்களை வாசிக்க முடிகிறது.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை, இந்த நேரத்தில் ஒரு பிரமாண்ட மருத்துவக்கல்லூரியாக மாறி இருக்க வேண்டும். ஆனால், பிற்காலத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய உள்ளூர் கிறிஸ்தவ மருத்தவர்கள், அதற்க்கான முட்டுக்கட்டைகளை போட்டார்கள். நிறைய அனுபவங்கள் பெற்றபின் தங்களுக்காக தனித்தனி மருத்துவமனைகளை குமரி மாவட்டம் முழுக்க துவங்கினார்கள்.
நெய்யூர் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகி விட்டால் இவர்களுடைய மருத்துவவியாபாரம் படுத்துவிடும் என்ற முன்யோசனை தான் அதற்க்கு காரணம்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பிற்கால நிர்வாகிகள் கூட, மேற்படி மருத்துவவியாபாரிகளின் அழுத்தத்தால் அமுங்கி போனார்கள்.
............
80 களில், டி.ஜி.எஸ் தினகரன் தனது காந்தக்குரலால் மக்களை கட்டிப்போட, அவரை தூக்கி சுமந்தது குமரி சிஎஸ்ஐ கிறித்தவர்களே. தினகரன் பிரபலமாகி, ஒரு கன்வேன்சனுக்கு ஒருலட்சம் என்று கேட்க ஆரமபித்த பின் அந்த உறவு முறிந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தான், 'ஏழைகளுக்கு கல்லூரி' என்று அடித்தள மக்களிடம் காசு வசூல் செய்து காட்டுக்குள் காருண்யாவை உருவாக்கினார்கள்.
....
இதுபோன்ற ஆட்கள் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டிய நிர்வாகத்தில் இருந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். ஏன்?
வளர்ந்து விட்ட இந்த பெருந்தனவார்களின் கருணையால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்த கல்வி & வேலைவாய்ப்பினால், அவர்களுக்கு எதிராக எங்கேயும் குரல் எழுப்பாமலேயே போனார்கள். இதன் மூலம் சாமானிய CSI கிறித்தவர்களுக்கு இவர்கள் பெரும் துரோகத்தை இழைத்தார்கள்.
நெய்யூர் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகி விட்டால் இவர்களுடைய மருத்துவவியாபாரம் படுத்துவிடும் என்ற முன்யோசனை தான் அதற்க்கு காரணம்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பிற்கால நிர்வாகிகள் கூட, மேற்படி மருத்துவவியாபாரிகளின் அழுத்தத்தால் அமுங்கி போனார்கள்.
............
80 களில், டி.ஜி.எஸ் தினகரன் தனது காந்தக்குரலால் மக்களை கட்டிப்போட, அவரை தூக்கி சுமந்தது குமரி சிஎஸ்ஐ கிறித்தவர்களே. தினகரன் பிரபலமாகி, ஒரு கன்வேன்சனுக்கு ஒருலட்சம் என்று கேட்க ஆரமபித்த பின் அந்த உறவு முறிந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தான், 'ஏழைகளுக்கு கல்லூரி' என்று அடித்தள மக்களிடம் காசு வசூல் செய்து காட்டுக்குள் காருண்யாவை உருவாக்கினார்கள்.
....
இதுபோன்ற ஆட்கள் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டிய நிர்வாகத்தில் இருந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். ஏன்?
வளர்ந்து விட்ட இந்த பெருந்தனவார்களின் கருணையால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்த கல்வி & வேலைவாய்ப்பினால், அவர்களுக்கு எதிராக எங்கேயும் குரல் எழுப்பாமலேயே போனார்கள். இதன் மூலம் சாமானிய CSI கிறித்தவர்களுக்கு இவர்கள் பெரும் துரோகத்தை இழைத்தார்கள்.
இப்போது சொல்லுங்கள் இவர்கள் அரை பார்ப்பனர்கள் தானே.
....................
ஒரு ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் அளவுக்கு இவர்களுடைய அரசியல் கதைகள் குமரியில் இருக்கிறது. என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு இளையதலைமுறை இதை தீர்க்கமாய் பதிவு செய்து கேள்வி கேட்கும்.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157319607012780
....................
ஒரு ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் அளவுக்கு இவர்களுடைய அரசியல் கதைகள் குமரியில் இருக்கிறது. என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு இளையதலைமுறை இதை தீர்க்கமாய் பதிவு செய்து கேள்வி கேட்கும்.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157319607012780
சாமிக்கு படைத்ததை உணவை ஏன் மறுக்கிறார்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்?
சாமிக்கு படைத்த பொங்கலையும், பலகாரத்தையும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்கள் வாங்க மறுப்பது ஏன்?
----------------------------
மதம் தொடர்பான விவாதம் கொஞ்சம் இணையத்தில் வந்தால் போதும், "கிறித்தவனும், இஸ்லாமியனும் தர்ற பொருட்களை நாம தின்னனும். ஆனா, நாம கொடுத்தா தின்னமாட்டனுங்க... " என பலரும் சமூகவலை தளங்களில் பெருமுவதை பார்க்க முடியும்.
----------------------------
மதம் தொடர்பான விவாதம் கொஞ்சம் இணையத்தில் வந்தால் போதும், "கிறித்தவனும், இஸ்லாமியனும் தர்ற பொருட்களை நாம தின்னனும். ஆனா, நாம கொடுத்தா தின்னமாட்டனுங்க... " என பலரும் சமூகவலை தளங்களில் பெருமுவதை பார்க்க முடியும்.
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் SEMITIC RELIGIONS, அதாவது ஒற்றை கடவுளை மையமாக கொண்டு இயங்குபவை. அங்கே, கடவுளுக்கு என்று ஏதும் படைக்கபடுவதும் இல்லை, பூஜிக்கபாடுவதும் இல்லை, அவை ஆராதிக்கப்படுவதும் இல்லை. அப்படி செய்யப்படுபவைகளை பாவமாக, பிசாசுக்கு படைக்கப்பட்டதாக அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. ஒற்றை கடவுள் நம்பிக்கைகளில் வளரும் ஒருவர் அந்த நம்பிக்கையிலே வளர்கிறார். இஸ்லாமியர்க்கு குரானும், கிறிஸ்தவர்களுக்கு பைபிளும் மதநூல்களாக இருக்கிறது.
சரி, இனி இந்து மதத்திற்கு வருவோம். இங்கே யார் இந்து? கிறிஸ்தவ, இஸ்லாமியர் அல்லாத எவரும் இங்கே இந்து தான். முன்னோர் வழிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பவரும் இந்து தான். கல்லை கும்பிடாதே என்று சொன்ன ஐயா வைக்குண்டரும் இந்து தான். நாங்கள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக லட்டு உருட்டுவோம் என்று மிரட்டும் திருப்பதி கோயில் பிராமணரும் இந்து தான்.
இங்கு இருக்கும் பழங்குடி தொன்மமும், பெருதெய்வ வழிபாட்டில் இருந்து சிறு தெய்வ வழிபாடு வரை தொடரும் சில வழிப்பாட்டு கண்ணிகள் தான் இங்கே இந்துக்கள் என்று கோடிக்கணக்கானோரை இணைக்கிறது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக 'இந்தியா' என்ற ஐடியாலஜியின் மீது நின்று அரசியல் செய்கிறது பிராமணீயம். அது இந்துக்களை பிரியவோ, திரியவோ விடாது. இவற்றை எல்லாம் மீறி தான் குமரியில் அய்யாவழியினர், தங்களை தனி மதமாக அறிவிக்க கோருகிறார்கள். கர்நாடகா லிங்கத்தார் பெரும் போராட்டமே 'தனி மதத்திற்காக' நடத்தி வருகிறார்கள்.
கொஞ்சம் ஈழத்தை பாருங்கள். இதே வழிபாட்டு முறைகளை கொண்டுள்ள மக்கள் தங்களை 'சைவம்' என்று சொல்லிக்கொள்கிறார்கள், 'இந்து' என்றல்ல.
.............
.............
ஆக, இங்கே ஒருவர் தன்னை 'இந்து' என்று அடையாளப்படுத்திக் கொள்பவர், தனக்கென்று எந்த தனித்த அடையாளத்தையும், வழிபாட்டு முறைகளையும் வைத்துக்கொள்ளலாம். அதனால் தான், இந்துக்கள் என தங்களை அறிவித்துக்கொள்பவர்களால் எளிதாக தர்க்காவில் போய் மந்திரித்து கட்டிக் கொள்ள முடிகிறது, மாதா கோயிலுக்கு நேர்ச்சை போட்டு மொட்டை போட்டுக்கொள்ள முடிகிறது. Yes, They don't have any rules.
இவர்களை தான் ஹச். ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஒரே குடைக்குள் கொண்டுவர முயல்கிறார்கள்.
"அவர்கள் கோயிலுக்கு போய் நீ சாப்பிடுகிறாய், உன் கோயிலுக்கு அவர்கள் வருவார்களா? அவர்கள் சாமியை நீ கும்பிடுகிறாய், உன் சாமியை அவர்கள் கும்பிடுவார்களா?" என கேள்வி எழுப்புகிறார்கள். தொன்ம அடையாளத்தின் தொடர்ச்சியை 'இந்து' என்று கட்டமைத்திருக்கும் அரசியல் ஹச்.ராசாவுக்கு நன்றாகவே தெரியும்.
ஒற்றை தெய்வ வழிபாட்டில் இருக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிமுறைகளை கேள்விக்கு உட்படுத்துவதின் மூலம் தான் இங்கிருக்கும் சாமானியர்களை அவர்களுக்கு எதிராக திரட்ட முடியும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
"அவர்கள் கோயிலுக்கு போய் நீ சாப்பிடுகிறாய், உன் கோயிலுக்கு அவர்கள் வருவார்களா? அவர்கள் சாமியை நீ கும்பிடுகிறாய், உன் சாமியை அவர்கள் கும்பிடுவார்களா?" என கேள்வி எழுப்புகிறார்கள். தொன்ம அடையாளத்தின் தொடர்ச்சியை 'இந்து' என்று கட்டமைத்திருக்கும் அரசியல் ஹச்.ராசாவுக்கு நன்றாகவே தெரியும்.
ஒற்றை தெய்வ வழிபாட்டில் இருக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிமுறைகளை கேள்விக்கு உட்படுத்துவதின் மூலம் தான் இங்கிருக்கும் சாமானியர்களை அவர்களுக்கு எதிராக திரட்ட முடியும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
இந்த சாமானிய இந்துக்கள் மறந்து போகும் ஒரு சங்கதி ஒன்று இருக்கிறது. அது, இஸ்லாமிய சமூகத்திக்கு உள்ளேயே, 'தர்காக்களை இடிப்போம்' என்பவர்களும் உண்டு, "ரோமன் கத்தோலிக்கர்கள் பிசாசுகளை கும்பிடுகிறார்கள்" என சொல்லும் சீர்திருத்த, பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களும் உண்டு. இவர்களுக்கு ஒன்றும் செவிசாய்க்காமல் வருடாவருடம் சர்சுகளில் பொங்கல் இடுபவர்களும் இதே கத்தோலிக்கர்கள் தான்.
தர்க்காவுக்கு செல்லும் இஸ்லாமியரும், சர்ச்சில் பொங்கல் வைத்து கொண்டாடும் கிறிஸ்தவரும், குலசாமி வழிபாட்டில் தனது பண்பாட்டை தக்கவைத்திருக்கும் இந்துவும் ஒற்றுமையாக இங்கே இருப்பதால் தான் இந்த மண் இன்னும் கலவரபூமியாக மாறாமல் இருக்கிறது.
ஆக, இங்கே ஒற்றை கடவுளை மட்டுமே கொண்டாடும் செமிடிக் மதத்தவர் சிறுபான்மையிலும் சிறுப்பான்மை. அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதில், கண்டிப்பதில் தவறே இல்லை. ஆனால், அவன் என் கோயிலில் சமைத்ததை ஏன் சாப்பிடவில்லை எனக் கோருவது, 'ஒரு சாமானியர் சமைத்த மாட்டுக்கறியை இந்த அக்ரகாரத்து ஆள் ஏன் சாப்பிட மாட்டேங்குறார்?' என்று கதறுவது போன்றது.
முரண்பாடுகளை பேசிக் களைந்து, இது போல என்று இணைத்து செயல்படுவோம்.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157327944337780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157327944337780
முகிலனின் கதை
முகிலன்---> முகிலன்விளை
குமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் பெயர்களை ஆழ்ந்து கவனித்ததுண்டு. ஒவ்வொரு ஊரின் பெயர் காரணங்களை சொல்லித்தர வேண்டிய மூதாதைய கண்ணிகள் எப்போதோ அது தொடர்பான நினைவுகளை தவற விட்டிருக்கிறார்கள். தம்பி பால் பெக்கர், வெகு சமீபத்தில் முகிலன் தொடர்பான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த பதிவை எழுகிறேன்.
................................
................................
காலம் : 1680, தில்லியில் சுல்தானாக அவுரங்கசீப் இருக்கிறார். இந்தியா முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்ட வர, அவுரங்கசீப் தொடர்ந்து போர்கள் செய்து வருகிறார். தெற்க்கே இருக்கும் சில நிலப்பகுதிகள் அவருக்குள் கீழ் வராமல் இருப்பதை அறிந்த அவர், வேணாடு (திருவான்கூருக்கு முந்தைய பகுதி) நோக்கி செல்ல தனது நம்பிக்கையான தளபதியை கட்டளையிடுகிறார். அந்த தளபதி தான் முகிலன் (அவர் பிறப்பால், மதுரையை சார்ந்த தமிழர் என்றும், பிறகாலத்தில் இஸ்லாமிய சமயத்தை தழுவி அவர்கள் போர் படையிலேயே இணைத்தார் என்பது செவிவழி வரலாறு).
வேணாடோ, 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' போல, உள்ளூர் ஆட்சியாளர்களில் கைகளில் இருக்கிறது. ஆற்றிங்கல் ராணியாக உமையம்மை ராணி இருக்கிறார்.
வழியில் இருக்கும் சிறுகுறு அரசுகளை எல்லாம் வீழ்த்தி வரும் முகிலன், வேணாட்டு அரசை எளிதாக கைப்பற்றுகிறார். இங்கே கைப்பற்றப்பட்ட பொருட்களில் சிலவற்றை அவுரங்கசீப்புக்கு பரிசாக அளித்து விட்டு, 'வேணாட்டு ராஜா'வாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.
முகிலனை வெல்லவே முடியாது என்று எண்ணும், உமையம்மா ராணி, கோட்டயம் பகுதியில் ராஜாவாக இருக்கும் கேரளவர்மனிடம் உதவிகள் கேட்கிறார். முகிலனின் படைபலத்தை கண்டு திகைக்கும், கேரளவர்மன் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேர்ச்சை வைத்து வழிபடுகிறார்.
திருவட்டாறு அருகே உள்ள மலை பகுதியில் போர் நடக்கிறது, போர் உச்சத்தை தொடும்போது குழவிகள் முகிலனின் படைகளை தாக்குகிறது. முகிலனின் படைகள் பின்வாங்கி காட்டில் போய் மறைகிறது. குளவிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முகிலன் காட்டிலேயே இறந்து போகிறார். முகிலனை அந்த பகுதியிலே அடக்கம் செய்து விட்டு படைகள் திரும்ப போகிறது. (திருவட்டாறு அருகே அவரது கல்லறை இருப்பதாக தகவல்- நான் பார்த்ததில்லை)
..........................
..........................
இப்படி ஒரு குறுகியகாலத்தில் வேணாட்டை கைப்பற்றி தன்னை ராஜாவாக பிரகடனம் செய்துக்கொண்ட முகிலனை பற்றிய தகவல்கள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுவாரசியமாக 'முகிலன்' ஆண்டதற்கும், இருந்ததற்கும் சாட்சியாக குமரி முழுக்க முகிலன் என்ற பெயரோடு தொடங்கும் ஊர்கள் உள்ளன.
சில உதாரணங்கள்,
முகிலன் விளை - மிடாலக்காடு
முகிலங்கரை - மணலிக்கரை
முகிலன்விளை - இருளப்பபுரம்
முகிலன்குடியிருப்பு - கன்னியாகுமரி - மணக்குடி சாலை
முகிலங்கரை - மணலிக்கரை
முகிலன்விளை - இருளப்பபுரம்
முகிலன்குடியிருப்பு - கன்னியாகுமரி - மணக்குடி சாலை
*விளை என்பது விளைநிலங்கள் உள்ள பூமி என்று குறிப்பதாகும்.
...............
...............
முகிலன் ஒரு தமிழர் என்பதால், அவர் தொடர்பான வரலாறு மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
முகிலன், முகிலன்விளை தொடர்பான செய்திகள் நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157334098687780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157334098687780
Thursday, December 6, 2018
திருவாங்கூரின் கடைசி பிரஜை
எங்கள் ஊரின் கடைசி திருவாங்கூர் பிரஜையான 'கிராப்பு தாத்தா' என்ற தாசையன் தாத்தா மறைந்தார்.
ஏன், திருவாங்கூர் ஆட்சியில் பிறந்து, வளர்ந்த வேறு யாரும் ஊரில் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால், 100 ஆண்டுகள் கடந்த ஒரே முதியவர் இவரே. மட்டுமல்லாது, மன்னர் ஆட்சியை கடந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆன பின்னும் அவரது நினைவிலும், வாழ்வியலிலும் சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசை, 'மன்னர் ஆட்சி'யின் நீட்சியாகவே நினைத்தே வாழ்ந்தார்.
ரூபாய் க்கு நாம் எப்போதோ மாறி இருந்தாலும், அவரோ ரூபாயை திருவாங்கூரின் 'சக்கறம்' என்பார். அரசும், கவர்மெண்டும் அவருக்கு எப்போதும் 'சர்க்காரே'.. போலீஸ் மீதான அதீத பயம் அவருக்கு இருந்தது. அதே வேளையில், போலீஸ் ஸ்டேசன் வாசலை ஒருநாள் கூட மிதித்ததில்லை என்ற பெருமிதமும் அவருக்கு இருந்தது. அரசு-சாமானியன், இதற்கு இடையே இருக்கும் ஒருவிதமான மிரட்சியான அரசியலை அவரது வாழ்க்கையை அவதானித்து நிறைய உள்வாங்கிக் கொண்டேன்.
ஊரின் மிகச்சிறந்த 'பனையேறி'. அவர் பனை ஏற கற்றுக்கொண்டவை எல்லாம் மூன்றாம் தலைமுறையிலும் பேசப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட ஆசிரியரின் அடிக்கு பயந்து அவரும் இன்னொரு பெரியப்பாவும் ஊர் சுற்றுவார்களாம். அந்த நேரத்தில் பொழுதுபோக, 'யார் அதிக உயரத்தில் பனை ஏறுகிறார்கள்?' என்பது தான் அவர்களுக்குள் நடக்கும் போட்டி. ஒருவர் ஏறிய தூரத்தை விட இன்னொருவர் அதிகம் ஏறி, எச்சில் துப்பி வைப்பார்களாம். அதை இன்னொருவர் தாண்டி விட்டால் அன்று அவர்கள் தான் "வின்னர்". இப்படி பள்ளி 'கட்டடித்து' ஏற துவங்கிய அவர்கள் பனையேற்றம், வெகு சிறுவயதிலேயே தொழிலில் இறக்கி விட, ஊரின் மிகச்சிறந்த பனையேறிகளாக இருந்திருக்கிறார்கள். பெரும்பாலான மரம் ஏறிகளின் வாழ்க்கையை போல மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டதும், பின் மலைகளை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு மாறி இருக்கிறார்.
தாசையன் என்ற அவரது இயற்பெயரில் எப்படி 'கிராப்பு' என்ற பட்டப்பெயர் தொத்திக்கொண்டது என்று தெரியவில்லை. ஆனாலும் ஊரில் இன்றும் எல்லோருக்கும் அவர் 'கிராப்பு' தாத்தா தான்.
ஆம், கிராப்பு தாத்தா எனக்கு யார்? எனது தந்தை வழி உறவினர். குமரி பாஷையில் 'அருவக்காரங்க'. நான் பிறந்துவளர்ந்த வீட்டின் முன்வீடு தான் அவர்கள் வீடும். எனது தந்தையின் சிறு வயதிலேயே அவருடைய அப்பா தவறி விட்டதால், எனக்கு 'முதல் தாத்தா' வாக அறிமுகமானது கிராப்பு தாத்தா தான்.
மரவள்ளி கிழங்கு இலையை தின்று சாவக்கிடக்கும் ஆட்டின் காதை அறுத்து அதை உயிர்ப்பிக்கும் வித்தையை அவர் மூலம் தான் கற்றுக்கொண்டேன். அவர் வீட்டில் வளர்ந்த 'டைகர்' என்ற நாட்டு நாய் தான் என் முதல் செல்லப்பிராணி.
நான் 10 வயதுக்குள் இருக்கும் போது அவர் 70 களில் இருந்தார். இருள் குறித்தும், பேய்கள் குறித்தும் அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அவரது வீட்டு திண்ணையில் தான் அவரது ஊணும், உறக்கமும். ஊரில் அவரோடு வெற்றிலை சாப்பிடும் நண்பர்கள் இறந்து போனால், இரண்டொரு நாட்களில் அவர்கள் மீண்டும் இரவு வந்து திண்ணையில் உறங்கிக்கொண்டிருக்கும் இவரிடம் வெற்றிலையும், சுண்ணாம்பும் கேட்டதாக சொல்வார். பெரும் மிரட்சியோடு அவர் சொல்லும் விசயங்களை பயத்தோடு கேட்டுக்கொண்டிருப்போம். இரவு அவருக்கு பிடிக்காது, இரவில் வெளியே சுற்றுவதும் அவருக்கு பிடிக்காது. இரவில் எத்தனை மணிக்கு அவர் வீட்டு முன் நடக்கும் சத்தம் கேட்டாலும், திண்ணையில் இருந்து விழித்து, "இது யாரு?" என கேட்பார். "தாத்தா, நான்தான்" என்றால். "இந்த செம்பாதிக்கு எங்கல கறங்கீட்டு நடக்குதியா?...." என கோபப்படுவார்.
"ஏன் முன்ன மாதிரி இப்ப பேய் இல்ல..." என கேட்டால், "விளக்கு(மின்சாரம்) இருக்கியனால பேய் வரல" என்பார். அமானுஷங்கள் மீதான பயத்தின் சாரம் அவரது பேச்சின் தொடர்ச்சியாக தான் எங்களுக்கு வந்திருக்க வேண்டும்.
"ஏன் முன்ன மாதிரி இப்ப பேய் இல்ல..." என கேட்டால், "விளக்கு(மின்சாரம்) இருக்கியனால பேய் வரல" என்பார். அமானுஷங்கள் மீதான பயத்தின் சாரம் அவரது பேச்சின் தொடர்ச்சியாக தான் எங்களுக்கு வந்திருக்க வேண்டும்.
கிராப்பு தாத்தாவின் மனைவி நான் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்கள். மரணத்தின் வாசனை புரியாத வயதில் "ஏன் கிராப்பு தாத்தாவுக்கு, பாட்டி இல்லை?" என அம்மா,பெரியம்மாவிடம் கேட்டிருக்கிறேன். "அவங்க ஏரோபிளேன்ல வெளிநாடு போயிருக்காங்க" என்பார்கள். "தாத்தா அப்போ ஏன் வெளிநாடு போவேல?" என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைத்ததில்லை. ஆனால், இன்று கிடைத்து விட்டது. இனி திரும்பி வரவே முடியாத வெளிஉலகுக்கு அவர் சென்று விட்டார்.
நூறு வயதை கடந்து வாழ்த்து மறைந்த ஒரு பாட்டனின் மறைவில் வருத்தமா என்றால்.. வருத்தம் தான். 5 தலைமுறைகளை கண்ட ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சியை அருகே இருந்து வழி அனுப்ப முடியவில்லையே என்ற வருத்தம். இன்னும் 17 நாட்களில் 'கிறிஸ்மஸ் விடுமுறை' வருகிறது. 'அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கலாமே தாத்தா' என்ற வருத்தம் வருகிறது.
எனது தந்தை வழி பூட்டனின் பெயர் 'சாமுவேல்'. அதற்க்கு முன்பே எங்கள் குடும்பம் மதம்மாறி இருந்தது. "நமது குடும்பம், எந்த காலத்தில் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இருந்து வெளியே வந்து கிறிஸ்தவத்தை தழுவிக்கொண்டது?" என்ற கேள்வியை கிராப்பு தாத்தாவிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டேன். ஆனால், அந்த கேள்விகளை உள்வாங்கிக்கொள்ளும் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. எங்கள் குடும்பத்தின் மதம் மாற்றம் சார்ந்த எனது தேடலுக்கான கடைசிக் கண்ணியும் தவறி விட்டதாகவே இந்நேரம் உணர்கிறேன்.
ஊர் பெரியவர்களில் மூப்பர் இவர் தான். அதனால் தான் இவரை இன்றுவரை 'மூப்பிலு' என்று பெரியவர்கள் அழைத்தார்கள்.
மூரியங்கோணத்தின் மகத்தான மரபொன்று விடைபெற்று இருக்கிறது. அவரை பார்த்து, வியந்து, பயந்து வளர்ந்த பெரும்பாலான இளந்தாரிகள் அவரை வழியனுப்ப இன்று அருகில் இல்லை.
என்ன சொல்ல?.... 'போய் வாருங்கள் தாத்தா!'
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157159835947780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10157159835947780
Tuesday, November 6, 2018
போலீஸை தெறிக்க விட்ட ஜெர்மன் பாட்டி
வடிவேலு ஒரு படத்தில் பேருந்து நடத்துனராக இருப்பார். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது வெளியே நிற்கும் பாம்பாட்டி, கைப்பையில் இருக்கும் பாம்பை வெளியே எடுத்து சீட் பிடிப்பதற்காக ஜன்னல் வழியே உள்ளே போடுவார். பேருந்தில் ஏறிய மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவார்கள். இந்த நகைச்சுவைக்கும் சற்றும் குறைவில்லாமல் மேற்கு ஜெர்மனியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
லிவர்குசேன் நகரில் வசித்து வந்த அந்த 90 வயது மூதாட்டி திடீரென ஒரு முடிவை எடுத்தார். இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த போது அந்த மூதாட்டியின் கணவர் அந்த பொருளை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். கணவர் இறந்தபின் அந்த பொருள் எதற்கு இருக்கிறது என யோசித்த அந்த மூதாட்டி, 70 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்த பொருளை காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்தார்.
தனது காரில் அந்தப் பொருளை எடுத்துப்போட்டு, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் அவர் கொண்டு சேர்த்திருக்கிறார். அந்த பொருளை பார்த்ததும் தெறித்து அலறிய போலீசார், போலீஸ் ஸ்டேசனையும், அந்த சாலையையும் உடனே காலி செய்திருக்கிறார்கள்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கும் பின் அந்த பொருள் செயலிழக்க செய்யப்பட்டது. ஆம், அந்த மூதாட்டி கொண்டு கொடுத்த பொருள், இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவால் வீசப்பட்ட கிரனைட் குண்டு. வெடிக்காமல் சுமார் எழுபது வருடங்கள் அந்த மூதாட்டியின் வீட்டிலேயே அந்த கிரானைட் இருந்திருக்கிறது.
இந்த சம்பவத்திக்கு பிறகு.லிவர்குசேன் காவல்துறை அவசர அவசரமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இது போன்ற பொருள் ஏதேனும் வீட்டில் இருந்தால் உடனே காவல்துறையை அழைக்குமாறும், தன்னிச்சையாக யாரும் குண்டுகளை நேரடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.. 😀😀😀
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156945232347780
Saturday, October 28, 2017
தமிழிசை என்ற வெகுளியான எதிரி
இன்றைய தேதியில், சமூக வலைதளங்களில் அதிகமாக வசைப்பாடப்படும், விமர்சிக்கப்படும் அரசியல்வாதிகள் யாராக இருக்கும்..
1. தமிழிசை 2. ஹச்.ராஜா.............
தமிழிசை, தமிழ்நாடு பிஜேபியின் தலைவர் தான் ; ஆனால், அவர் உளரும் 'தத்து பித்துக்களை' மேலிடத்தில் போட்டுக் கொடுக்க ஆளே இல்லையா?. 'இவர்களை விட மிக கவனமாக மீடியாவுக்கு பூசி மெழுக ஆட்கள் இல்லையா?' இருக்கிறார்கள்.. பிறகு ஏன்?
தமிழக கட்சிகள் அனைத்தும் தனி தனியாக போட்டியிட்டால், இன்று பிஜேபி யின் இடம் எதுவாக இருக்கும்? ஐந்து/ஆறு/எழு..... பிறகு ஏன் மெர்சலுக்கு விஜய்யை, தோழர் திருமாவை என சம்மந்தமே இல்லாமல் இவர்கள் வம்புக்கு இழுக்க வேண்டும்?
எளிமையாக நான் கண்டறியும் முதல் காரணம்..
நாம் பேச வேண்டும், முழுமையாக அவர்களை பற்றி நாம் பேச வேண்டும்.. நாம் பேசி பேசி அவர்களை ஒதுக்க வேண்டும். முடிவில், நம்மை எதிர்ப்பவர்கள் அவர்களை ஆதரிக்க செய்யவேண்டும்.. அவ்வளவே. (இப்போது தமிழகத்தில், அவர்கள் இடம் எதுவாக அமையும் என யோசித்துப் பாருங்கள்).
நாம் பேச வேண்டும், முழுமையாக அவர்களை பற்றி நாம் பேச வேண்டும்.. நாம் பேசி பேசி அவர்களை ஒதுக்க வேண்டும். முடிவில், நம்மை எதிர்ப்பவர்கள் அவர்களை ஆதரிக்க செய்யவேண்டும்.. அவ்வளவே. (இப்போது தமிழகத்தில், அவர்கள் இடம் எதுவாக அமையும் என யோசித்துப் பாருங்கள்).
குமரி மாவட்ட வேட்டை சமூகங்களுக்கு தெரிந்த (நிஜ)கதை தான் இது. காட்டு பன்றியை வேட்டையாட போகும் போது, கூடவே ஒரு சவலை பட்டியையும் (மெலிந்த நாய்) தூக்கிக்கொண்டு போவார்களாம். காட்டுபன்றியை துரத்தி ஒரு பாறை முடுக்கில் கொண்டு செல்லும்போது, முதன்முதலாக அவர்கள் தூக்கி வீசுவது, அந்த 'சவலை பட்டியை'தான்.. இனிமேல், மீளவே வழியில்லை என நினைக்கும் காட்டுப்பன்றி, முதலில் தன் முன்னிருக்கும் அந்த மெல்லிய நாயை தாக்க முயலும். அந்த நாயை, காட்டுப்பன்றி தாக்கும் தருணத்தில், அந்த பன்றியை வேட்டைக்காரர்கள் கொன்றிருப்பார்கள்.
இப்போது, நாம் விவாதிக்கும் தமிழக அரசியலோடு இந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்திப் பாருங்கள் விடை கிடைக்கும்.. ஏன் கே.டி ராகவன்கள், நாராயணன்கள், நிர்மலாக்கள் இது பற்றி பேசவே இல்லை என்பதும் புரியும்.
இப்போது, நாம் விவாதிக்கும் தமிழக அரசியலோடு இந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்திப் பாருங்கள் விடை கிடைக்கும்.. ஏன் கே.டி ராகவன்கள், நாராயணன்கள், நிர்மலாக்கள் இது பற்றி பேசவே இல்லை என்பதும் புரியும்.
இன்னொன்று, கடந்த சட்டசபையில் (2011-2016) தமிழக அமைச்சர்கள் செய்த கூத்துக்கள் நியாபகம் இருக்கிறதா?. அன்று வெகுஜன மக்களிடையே பழக்கமாக இருந்த ஒரு வாக்கியம், 'இவங்க எப்படி இருந்தாலும், அவங்க(ஜெ) நல்ல கவர்னன்ஸ் தருவாங்க...' ; இது போன்ற ஒரு உத்தியை தான் நம்மிடையே மீண்டும் புகுத்த எத்தனிக்கிறது பிஜேபி.. அநேகமாக அந்த புதிய 'அவங்க' நிர்மலா சீத்தாராமனாக இருக்கலாம்.
...........
இந்த நிலையில், கடந்த 20 செப்டம்பர்'17 அன்று ஜூனியர் விகடனில் வெளிவந்த தமிழிசையின் பேட்டி மிக முக்கியமானது..
அது
//
“உங்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகரும் கூட உங்கள் பேச்சை விமர்சிக்கிறாரே?”
“உங்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகரும் கூட உங்கள் பேச்சை விமர்சிக்கிறாரே?”
“கட்சியைத் தாண்டி, சாதி ரீதியாக சிலர் யோசிப்பதால் வரக்கூடியப் பிரச்னை இது.”
//
//
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல் எதை முன்வைத்து நகர்கிறதோ, அதை தெரிந்தோ தெரியாமலோ தன் வாய்வழி உதிர்த்திருக்கிறார் தமிழிசை.
<; font-family: inherit;">இப்போதைக்கு ஒன்றே ஒன்றை சொல்ல முடியும்; பிஜேபி கோட்டையிலிருந்து தமிழிசை போன்ற வெகுளியான எதிரி, நமக்கு இனி எப்போதும் கிடைக்கப்போவதில்லை..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156069063197780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156069063197780
தமிழ் பெண்கள் அழகா Vs கேரளா பெண்கள் அழகா - நீயா நானா
எப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்னோட 2 சென்ட்ஸ்.. தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை தக்க வைக்க இப்பிடி ஒரு சர்ச்சையான தலைப்பை 'நீயா நானா' குழு வைத்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 'அழகு' என அவர்கள் சுட்டுவது கூட நிறத்தை முன்வைத்தே என்று நினைக்கிறேன்.
...
கேரளாவில் யூதர்கள் குடியேறி சுமார் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிறது, யூதா மாப்பிளாக்கள் என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஐரோப்பியாவின் கிழக்கு பகுதியில் இருந்து கிளம்பிய கிறிஸ்தவர்கள், இங்கிருந்தே பூர்வகுடிகளோடு கலந்து இன்று தோமா கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மாப்பிளாக்கள், வணிகம் செய்யவந்த தங்கள் 'அரேபிய' வேர்கள் தொடர்பான கதையாடல்களை மறுப்பதில்லை.
பத்தாம் நூற்றாண்டில் கேரளாவில் காலடிவைத்த ஆரிய நம்பூதிரிகளின் இனக்கலப்பு இன்னொரு புதிய ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டது. நம்பூதிரிகளுக்கு படுத்து சேவை செய்வது கடவுளுக்கே செய்வது என வரிகளை உருவாக்கி, அது மருமக்கதாயம், தறவாடு என இன்னொரு மோசமான கலாச்சார சூழ்நிலைக்கு அங்கிருந்த பெண்களை கொண்டு சென்றது (இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்).
பிறகு கேரளாவுக்கு வந்த, போர்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சு காரார்கள்.... என்ன மூச்சு முட்டுதா? ;-)
ஆக மலைநாட்டு வெத்திலையோடு, சுண்ணாம்பு பாக்கு புகையிலை எல்லாம் போட்டு இடித்து சிவப்பாக்கி விட்டு, தமிழகத்தில் இருக்கும் கம்மாறு வெற்றிலை அழகில்லை என சொன்னால் நியாயமா நியாயம்மாரே..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156053821267780
...
கேரளாவில் யூதர்கள் குடியேறி சுமார் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிறது, யூதா மாப்பிளாக்கள் என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஐரோப்பியாவின் கிழக்கு பகுதியில் இருந்து கிளம்பிய கிறிஸ்தவர்கள், இங்கிருந்தே பூர்வகுடிகளோடு கலந்து இன்று தோமா கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மாப்பிளாக்கள், வணிகம் செய்யவந்த தங்கள் 'அரேபிய' வேர்கள் தொடர்பான கதையாடல்களை மறுப்பதில்லை.
பத்தாம் நூற்றாண்டில் கேரளாவில் காலடிவைத்த ஆரிய நம்பூதிரிகளின் இனக்கலப்பு இன்னொரு புதிய ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டது. நம்பூதிரிகளுக்கு படுத்து சேவை செய்வது கடவுளுக்கே செய்வது என வரிகளை உருவாக்கி, அது மருமக்கதாயம், தறவாடு என இன்னொரு மோசமான கலாச்சார சூழ்நிலைக்கு அங்கிருந்த பெண்களை கொண்டு சென்றது (இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்).
பிறகு கேரளாவுக்கு வந்த, போர்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சு காரார்கள்.... என்ன மூச்சு முட்டுதா? ;-)
ஆக மலைநாட்டு வெத்திலையோடு, சுண்ணாம்பு பாக்கு புகையிலை எல்லாம் போட்டு இடித்து சிவப்பாக்கி விட்டு, தமிழகத்தில் இருக்கும் கம்மாறு வெற்றிலை அழகில்லை என சொன்னால் நியாயமா நியாயம்மாரே..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156053821267780
அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக
அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக..
.........
.........
ஸ்டாலின் பெலிக்ஸ்' என்ற எனது பெயரின் இரண்டாவது பகுதியை வைத்தது எனது பெரியம்மா. அப்பா எனக்கு 'கார்ல் மார்க்ஸ்' என பெயர் வைக்க நினைத்தாராம், ஊர் கிழவிகள் அந்த பெயரை மென்று தின்று விடுவார்கள் என சொல்லி அம்மா கடுமையாக மறுக்க, பின் ஸ்டாலின் என வைத்திருக்கிறார்கள். சென்ற முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த போது, எனது தாய்மாமன் என்னிடம், 'ஸ்டாலின்' என எனக்கு பெயர் வைத்து, அதை பிறப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது அவர் தான் என்றார்.
பெரியவர்கள் செய்த தவறை நாம் செய்யக்கூடாது என்று கருதிய காலகட்டத்தில் ஈழம் நம் கையை விட்டு போயிருந்தது. அதற்க்குபின் பிறந்த மகளுக்கு 'எழில் ஓவியா' என்றும் மகனுக்கு 'இளஞ்சேரல்' என்றும் பெயர் சூட்டி மகிழ்தோம். 2012 ஆம் ஆண்டில் எனது பெயரையும் தூயதமிழில் மாற்றிக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்த சூழ்நிலையில் புலம் பெயர்ந்தேன்.
2014 லுக்கு பின் காவி பயங்கரவாதிகள், தமிழ்/செங்கிருந்த பெயர்களை தவிர்த்து மற்ற அனைத்து பெயர்களையும் 'எதிரி'களாக சித்தரிக்க துவங்கிய போது, நான் எனது பெயரை மாற்ற நினைத்தது தவறு என முதன்முதலாக உணர்ந்தேன்.
இப்போது பாம்பு வேறு வடிவில் காலை சுற்ற துவங்கி இருக்கிறது. யாரெல்லாம் இன உணர்வில் தங்கள் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றிக் கொண்டார்களே அவர்களை 'டார்கெட்' செய்து, பாருங்கள் தமிழ் பெயரில் ஒளிந்து இருக்கும் கிறிஸ்தவர்களை என பரப்புரை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்களுடைய இந்த பரப்புரை எந்த பெரியபாதிப்பை உருவாக்கப் போவது இல்லை என்றாலும், 'ஒருவேளை அப்படி இருக்குமோ....'என்ற லேசான சந்தேக உணர்வை பொது நிலையினரிடம் தூண்டி விடுவதே இந்த 'காவி அடிமைகளின்' நோக்கம்.
...
...
இனி, எந்த சூழ்நிலையிலும் இந்த 'தண்ணீர் பாம்புகளுக்காக' நான் பெயர் மாற்றிக்கொள்ள போவதில்லை. பெயரை வைத்து, 'அசலான்' என வசைபாடும் ஹச்.ராசா சர்மா வாவை விட நாங்கள் கறுப்பர்கள். ஒரே மண்ணில் நீண்ட தலைமுறை தலைமுறையாக வாழும் ஒரு பாரம்பரிய மரபு எங்களுக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் விட, உங்களை விட அட்சர சுத்தமாக வள்ளுவ தமிழை நாங்கள் பேசுகிறோம். போடா டேய்..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156052037127780
.........................................
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156052037127780
.........................................
அமெரிக்கா போன நம்மூர்...
கிருஷ்ணன்-கள் எப்படி Chris ஆனார்கள்?
கோபால்-கள் எப்படி Gops ஆனார்கள்?
சந்தனமூர்த்தி -கள் எப்படி Sandy ஆனார்கள்?
சரவணன் -கள் எப்படி Sarav ஆனார்கள்?
என்பதையும் ஆராய்ந்து சொல்லலாம் ஹச்.ராஜா சர்மா ஜி..
என்ன, அமெரிக்கக்காரன் இதெயெல்லாம் கண்டுக்காம விட்டிருவான். அவன் காலை நக்கி பிழைக்கும் உள்ளூர் நாய்கள் தான் குறைத்துக் கொண்டிருக்கிறது.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156049092382780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156049092382780
மெர்சல் - பலமற்ற எதிரியை உருவாக்குகிறதா ரா?
தமிழிசையின் 'மெர்சல்' விஜய் தொடர்பான விமர்சனமும், அதற்க்கு 'நம்மவர்கள்' தரும் பதிலடியை பார்க்கும்போது சலிப்பாகவும், கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் 'ரா'மையாக்களால் நாம் திசைத்திருப்பப்படுகிறோம்.
முதலில் நடிகர் விஜய் தொடர்பாக ஒரு டிஸ்க்கிளைமர்: என் வாலிபத்தின் ஆரம்பக் கட்ட நாட்களை முழுமையாக ஆக்கிரமித்தப் படம் 'பூவே உனக்காக'. கணக்குவழக்கே இல்லாமல் பார்த்தப்படம் அது. இன்றும் அந்த படத்தின் கிளைமாக்ஸ் வசனங்களை அப்படியே ஒப்புவிப்பேன். விஜயை எனக்கு பிடிக்கும் என வெறுமன சொன்னால், என் மகள் கோபித்துக்கொள்வாள்.. ஏனென்றால், அவளுக்கு விஜய், மிக மிக மிக பிடித்தமான நடிகர்.
இனி விசயத்துக்கு வருவோம்,
உலகமயமாக்கலின் உச்சத்தில் இருக்கும் இந்த நாட்களில் தான், தமிழ்நாட்டில் மட்டும் தீவிரமான மண் சார்ந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. தெற்கே 'இந்தியா' என்ற கற்பிதத்துக்கு இன்றளவும் சிம்ம சொற்பனமாக இருப்பது, இங்கிருக்கும் 'ஆரிய எதிர்ப்பு' கருத்தியல் தான். ஆக, 'இந்திய' 'பாரதிய' கருத்தியலை எதிர்க்காத, ஆனால் மண் சார்ந்த விசயங்களை பேசும் கட்சியோ, ஆட்களோ 'இராமையா'வுக்கு வேண்டும். அதற்கான தற்போதைய இரை தான் விஜய்.
திராவிட கருத்தியலும், தீவிர இடதுசாரி கருத்தியலும் கோலோச்சிய காலம் ஒன்று தமிழகத்தில் இருந்தது. இரண்டு கருத்தியலை ஒரு சேர அடித்து நொறுக்க ராமையாவுக்கு கிடைத்த ஆளுமை 'எம்ஜிஆர்'. தமிழ் மண்ணில் வளர்ந்த இடதுசாரி தத்துவங்களை நொறுக்க எம்ஜிஆரை, அமெரிக்காவின் சி.ஐ.எ அமைப்பு வரை உபயோகித்தது என்பதை நான் சொல்லவில்லை, காங்கிரசின் 'நவசக்தி' இதழ் ஏழுபதுகளின் பகுதியில் சொன்னது,எழுதியது.
இனி விஜய்க்கு வருவோம், 'ஆம், அவர் திரையில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக, வடநாடு அரசியல்வாதிகளுக்கு எதிராக' கருத்துகளை முன்வைக்கிறார். ஆனால், நிஜத்தில் அவர் எத்தனை முறை இதே அரசியலை பேசி இருக்கிறார்?. அவர் பேச மாட்டார். ஏனென்றால், அவருடைய களம் என்பது 'முதலமைச்சர்' அரசியல் கொள்கைகளே தவிர, எந்த தொண்டரையும் கார்பரேட்டுக்கு எதிராகவோ, நடுவண் அரசியலுக்கு எதிராகவோ வலுவாக உருவக்குவது அல்ல. எம்ஜிஆர் என்ற சினிமா பிம்பத்தை எந்த தத்துவமில்லாமல் ஆதரித்ததற்கான விலையை தான், நான்கு தசமங்கள் தாண்டியும், ஓபிஎஸ்-எபிஎஸ் என இன்றளவும் கொடுத்து வருகிறோம்.
ஆக, விஜய் என்ற ஒன்றை நபர், அடுக்கு மொழி வசனங்களை பேசி நடுவண் கட்சிகளுக்கு எதிராக பேசுவதும், அவரை ஒரு எதிரியாக தமிழகத்தில் உருவாக்குவதும், காட்டுவதும் இராமையாகளுக்கும் ஒரு இலகுவான இலக்காக போய் விடும். ஒரே ஒரு சிபிஐ ரெய்டில் எல்லா வீர ஆவேச பேச்சையும் அப்படியே சரணடைய செய்து விடுவார்கள். 'காங்கிரசோ' 'பிஜேபியோ' வேறு எந்த இந்திய கட்சியோ, 'இளைய தளபதியின்' ஒரே அறிக்கையிலே தம்பிகள் அடங்கிப் போய் விடுவார்கள், ஏனென்றால் தத்துவமில்லாத அரசியல் என்பது ஒரு முட்டுசுவர். தமிழகத்தில் தற்போது நடப்பதும் அது தான்.
ஆக, தோழர்களே/உறவுகளே/தம்பிகளே, 'அரசியல் கவனிப்போம்' 'அரசியல் பேசுவோம்' பின் 'அரசியல் செய்வோம்'.
பின்குறிப்பு> 'இராமையா' என்றால் என்னவென்று புரியாத புதியவர்களுக்கு, இந்திய உளவு அமைப்பான 'ரா' வுக்கு தமிழ் தோழர்கள் வழங்கிய கேலிப் பெயர்.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156046111982780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156046111982780
டகிலா கவிதைகள் 1
நண்பன் கண்ணாடி அணிய துவங்கும் போது..
நண்பனின் தாய் மரணிக்கும் போது..
நண்பனின் மகள் பூப்பெய்தும் போது...
நண்பனின் மனைவி படிதாண்டும் போது...
ஒரு பிரம்மச்சாரி வயதாவதை உணர்கிறான்.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156045751237780
நண்பனின் தாய் மரணிக்கும் போது..
நண்பனின் மகள் பூப்பெய்தும் போது...
நண்பனின் மனைவி படிதாண்டும் போது...
ஒரு பிரம்மச்சாரி வயதாவதை உணர்கிறான்.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156045751237780
கியூபாவை உலுக்கிய டெங்கு காய்ச்சல்
1980 ஆம் வருடம், அமெரிக்க ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து ஒரு கப்பல் கியூபா நோக்கி செல்கிறது. கியூபாவில் இருந்த சோவியத் ரஷ்ய படைகளுக்கு எதிராக உபயோகிக்க, 'கிருமி'களை அந்த கப்பலில் எடுத்துச் செல்கிறார் ஒமேகா 7 என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் எட்வர்டு அரோசினா.
எட்வர்டு அரோசினா-வுக்கு இந்த கிருமிகளை கொடுத்தனுப்பிய சி.ஐ.எ வின் கணக்கோ வேறுமாதிரி இருந்தது. விளைவு, சுமார் மூன்று லட்சம் கியூபன் மக்களை இந்த டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது. கியூபா மருத்துவதுறையில் வெகு முன்னேறிய நிலையில் இருந்ததால், 154 மட்டுமே இந்த 'பயோ வார்' ஆல் கொல்லப்படுகின்றனர், இதில் 101 பேர் குழந்தைகள் என்பது கியூப வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.
.............................
.............................
இன்னும், இன்னும் எழுதி பீதியை உருவாக்க விரும்பவில்லை.. ஆனால், 'எல்லாவற்றையும் சந்தேகி' என்ற பேராசான் மார்க்ஸின் வார்த்தைகள் என்னை துரத்துகிறது.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780🙄
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780🙄
கற்றது தமிழ் - 10 ஆண்டுகள்
'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான போதும் ஐ.டி துறையில் தான் இருந்தேன். உதயம் திரையரங்கில், பத்துமணி காட்சியை பார்த்து விட்டு, அந்த நடுநிசி பனியில், கண்ணீரோடு அறைக்கு சென்றது இன்றும் நினைவில் உறைந்து போய் இருக்கிறது.
ஐ.டி துறையினரை படம் கடுமையாக சாடுகிறது என பரவலான விமர்சனங்கள் வந்த போதும், ஒருதடவை, இரண்டு தடவை, மூன்று தடவை.. என கணக்கே இல்லாமல் அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன், பார்க்கிறேன். இன்றளவும் 'கற்றது தமிழ்' எனது All time favourite.
சரி, 'கற்றது தமிழ்' எதைப் பேசுகிறது?
காதலையா? ஆம்.
உலகமயமாக்கலையா? ஆம்
தாய் மொழி கல்வி, சொந்த மண்ணில் அகதி ஆக்கப்பட்டதையா? ஆம்
கார்பரேட் உலகம் உருவாக்கிய தனி மனித சிக்கலையா? ஆம்.
ஆம், அமெரிக்காவில் ஒரு வங்கி வீழ்ந்தால், அம்பத்தூரில் கல்யாணம் நின்று போய் விடும் இன்றைய வாழ்க்கை சூழலை பத்து வருடங்களுக்கு முன்பே அந்த படம் பேசியது.
ஜீவா, அஞ்சலி என எத்தனையோபேருக்கு வாழ்வளித்த இந்தப் படம் முன்வைத்த அரசியலை, தமிழ் சினிமா இதற்க்கு முன்னரும் பேசியதே இல்லை, இதற்க்கு பிறகும் பேசவில்லை. இனிமேலும் யாராவது பேசுவார்களா என்பதும் சந்தேகமே..
எங்கையோ இருந்து ஒருவன் நமது வாழ்க்கையை, மொழியை, பண்டிகையை, கலாச்சாரத்தை தீர்மானிக்கும் வரை 'கற்றது தமிழ்' தமிழ் சமூகத்தில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்..பேசப்படும்.
இன்றோடு 'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது. இத்திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது அன்பும், வாழ்த்துகளும்.
மதமாற்றம் - பார்ப்பானியம்
'பிஸ்கட்டுக்கும், மாவுக்கும் தானல மதம் மாறினீங்க!' என கல்லூரில் நாட்களில் ஹிந்து(த்துவா) நண்பர்கள் கிண்டல் அடிப்பதுண்டு. நண்பர்களையே எதற்கு மதசர்ச்சை என பலரும் அதை பகடியாக கருதி கடந்து விடுவோம்..
:-)
Dick Kooiman என்ற ஆய்வாளரின் புத்தகத்தை வைத்து ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிக்க முடிந்தது. அதில் இருந்த சுவாரசியமான 'மதமாற்ற' வரலாறுகள்...
கார்த்திகை, மார்கழி மாதங்களில் திருவாங்கூர் ஹிந்து கோயில் விழாக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்யவேண்டியது கட்டாயமானதான இருந்திருக்கிறது. ஆனால், 'கிறிஸ்தவத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்' அந்த பணிகளை செய்யவேண்டியது இல்லை என்ற நடைமுறையும் இருந்துள்ளது. ஆக, இந்த கோயில் விழா காலங்களில், கிறிஸ்தவத்தில் இணைபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், விழா முடிந்ததும் அந்த எண்ணிக்கை குறைந்ததாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.
இன்னொன்று, 1914 ல் கிறிஸ்தவர்கள் மீது இருந்த Poll Tax விலக்கிக்கொள்ளப்பட்டதும், சுமார் ஆயிரம் குடும்பங்கள் கிறிஸ்தவத்தை நோக்கி வந்திருக்கிறார்கள். பின், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கும் அதே வரி விலக்கிக்கொள்ளப் பட்டபோது, அந்த சர்ச்ல் இருந்த குடும்பங்களில் எண்ணிக்கை 20.
............
............
குமரியின் கிறித்தவ மதமாற்றம் என்பது நீண்டதொரு வரலாற்று பின்புலத்தை கொண்டது. படையெடுப்புகளிலிருந்து காத்துக்கொள்ள, வர்ணாசிரமகட்டுகளில் இருந்து விலக, வரி விலக்குக்காக, கல்விக்காக என ஒவ்வொரு காலத்திலும் மக்கள் மதம் மாறினாலும், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்த மண்ணின் மரபார்ந்த(சிலவகை மூட பழக்கம் என்றாலும்) விசயங்களை கடைபிடிக்கிறார்கள் என்பது திண்ணம்.
பேசுவோம்..
#Travancore
#திருவாங்கூர்
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155997266592780
...................................................
#திருவாங்கூர்
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155997266592780
...................................................
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், தென் திருவாங்கூரில் தாழ்த்தப்பட்ட பெண்கள், உயர்சாதியின பெண்களை போல சேலை உடுத்த முற்பட்டபோது, பிரச்சனை திருவாங்கூர் அரசவைக்கு சென்று, பின் இங்கிலாந்து வரைக்கும் அந்த பஞ்சயாத்து சென்றது. அரசு மற்றும் உயர்சாதி தரப்பில் இருந்து அதை மறுத்து, 'தாழ்த்தப்பட்டவர்கள் மேலாடை அணியாமல் இருப்பது தங்கள் நாட்டு கலாச்சாரம்' என்றார்கள்.
இன்று, மனிதன் நவீனமாக விட்டான். செயற்கை இதயத்தையே கண்டுபிடித்து விட்டான், செவ்வாய்க்கும் ராக்கெட் அனுப்பி விட்டான்
இவனுங்க என்னன்னா... வே புன்னைகைங்க..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155991922732780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155991922732780
வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி
வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி
.................................................................
.................................................................
திருவாங்கூர் ஆர்க்கியாலஜிக்கல் சீரிஸ்-ல், ஒரு குறிப்பை தேடி துளாவிக்கொண்டிருந்தேன், திடிரென ஒரு வரி என்னை கொஞ்சம் தூக்கி போட்டது.
12 ஆம் நூற்றாண்டு, சரியாக மார்ச் 1173 ஸ்ரீ வீர் உதய மார்த்தாண்ட வர்மன் என்ற அரசன் வேணாட்டை (பிற்கால திருவாங்கூர், இன்றைய கன்னியாகுமரி) ஐ ஆண்டு வருகிறார். அந்த வேணாட்டின் அப்போதைய தலைநகராக இருந்த இடம் 'குழிக்கோடு'.
Some Early Sovereigns Of Travancore எழுதிய சுந்தரம் பிள்ளையும் 'குழிடைகூறு' என முன்வைக்கிறார். திருவாங்கூர் குறித்து இன்று எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், தரவுகளாக கையாளும், 'திருவாங்கூர் ஸ்டேட் மானுவேல்' எழுதிய நாகம் ஐயா குழிடைகூறு தான் பிற்காலத்தில் குழிகோடாக திரிந்ததாக எழுதுகிறார்.
சரி அதற்க்கு இப்போ என்ன என்கிறீர்களா? குழிக்கோடு' என்னுடைய சொந்த மண்; என் தந்தைவழி பாட்டன், பூட்டன், ஓட்டன் வசித்த மண். சிரிக்கவா, அழவா, பெருமிதப்படவா, சலிப்படையவா என்ற உணர்வு.
என் அனுபவத்திலும், முன்னோர்களிடம் இருந்து கேட்ட செவிவழி கதைகளிலும் எங்கள் மண்ணில் ஆட்சியாளர்கள் இருந்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு அம்மன் கோயில் தவிர, வேறு எந்த கட்டுமானங்களுமே இல்லாத விவசாய மண் அது.
வரலாறு இப்படி தான், யார் யாருக்கு எது எது தேவையோ, அப்போது அதை கையில் தூக்கி எடுத்து அரவணைத்துக்கொள்கிறார்கள் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை போல. அது பக்கத்து வீட்டுக்காரனை பார்த்து முறைக்கும் போது தான், நமக்கு வேடிக்கை காத்திருக்கிறது.
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155986799712780
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155986799712780
இரணியல் பாண்டியர் கோட்டை
1956, மலையாளி ஆதிக்கத்தை உடைத்து தாய் தமிழகத்துடன் தென் திருவாங்கூர்(கன்னியாக்குமரி) இணைவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு, பாராளுமன்றத்தில் குமரி இணைப்பு தொடர்பாக ஒரு அனல் பறக்கும் விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. விவாதத்தில் குறுக்கிட்ட, ஸ்ரீ அச்சுதன் என்ற மலையாள எம்பி "குமரி தமிழகத்துடன் இணையும் போது அங்கிருக்கும் மலையாளிகளின் நிலை என்ன?" என ஐயா மார்ஷல் நேசமணியை நோக்கி கேட்கிறார்..
ஐயா நேசமணி, "நாங்கள் எதுவெல்லாம் எங்களுக்கு வேண்டும் என்கிறோமோ, அது எல்லாம் இங்கிருக்கும் மலையாளிகளுக்கும் பகிரப்படும். எங்கள் தாய்மொழி தமிழ் மொழியாக இருந்த போதும், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் மலையாளத்தில் படிக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஆனால், குமரி-தமிழகம் இணைப்புக்கு பின் இங்கிருக்கும் மலையாளிகள் அவர்கள் தாய் மொழிகளில் படிப்பதை உறுதி செய்யும் விதத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்" என்றார். அவ்வளவு நூற்றாண்டு கால துயரத்துக்கு பின்னரும், மொழி சிறுபான்மையினரை நோக்கி யோசித்த உன்னதமான மனது , எங்கள் குமரி தந்தையின் மனது. இன்றளவும், குமரியில் மொழி சிறுபான்மையினருக்காக 'மலையாளம்' தனியாக கற்பிக்கப்படுகிறது.
............
இனி விசயத்துக்கு வருகிறேன்,
............
இனி விசயத்துக்கு வருகிறேன்,
குமரி வீரத்தமிழர் முன்னணியை' சேர்ந்த நண்பர்கள் சிலர், சிதைந்த நிலையில் இருக்கும் இரணியல் அரண்மனைக்கும், பாண்டியருக்கும் உள்ள தொடர்பை கண்டறிகிறார்கள். அதற்கான ஆதாரத்தை திரட்டியதும், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோட்டையை விரைவாக செப்பனிட கோரிக்கை வைக்கின்றனர். அவ்வளவு தான், இத்தனை நாள் 'இரணியல் கோட்டைக்கும், மலையாளிகளுக்கும்' முடிச்சுப்போட்டுக் கொண்டிருந்த 'குமரி' மலையாளிகளுக்கு கோபம் வர, அவர்கள் ஆற்றிய எதிர்வினை தான் கீழே உள்ள புகைப்படம்.
'இரணியல் பாண்டியர் கோட்டை' என நம்மவர்கள் முன்வைத்ததை 'இரணியல் "பாண்டி" பேலஸ்' எனவும், 'கண்டன் வீர நாராயண பாண்டிய' அரசன் என நம்மவர்கள் முன்வைத்ததை 'வீர நாராயண பாண்டிய' "கொத்தனார்" என நக்கல் அடித்து அவர்களது 'கன்னியாகுமரி மலையாளிகள்' முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
.............
அன்பு மலையாளிகளே,
.............
அன்பு மலையாளிகளே,
ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது, .போரை நிறுத்தக்கோரி கு முத்துக்குமார் என்ற தமிழ் சகோதரன், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு,தன் உடலையே தீக்கு இரையாக்கினான். அந்த கடிதத்தில் வரும் சில வரிகளை கீழே கொடுத்துள்ளோம்.
//
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும் //
//
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும் //
ஆம், நீங்கள், உங்கள் குழந்தைகள், உங்கள் பெண்கள் என அனைவரும் கேரளத்தில் வாழ்வதை விட குமரியில் அதிக பாதுகாப்புடனே வாழ்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பாண்டியர் கோட்டை பற்றி உங்களுக்கு முரணான பார்வை இருந்திருந்தால், ஒரு நீண்ட உரையாடலுக்கு நண்பர்கள் தயாராகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் வழக்கம் போல உங்கள் மேட்டிமையை காட்ட "பாண்டி" "கொத்தனார்" என கிண்டலடித்து, வன்மத்தோடு சிரித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
பாண்டியர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
நெடுஞ்சடையன் வேணாட்டை அதகளம் செய்து, நூற்றுகணக்கான யானைகளையும், குதிரைகளையும் பறித்து விழிஞத்தை நொறுக்கி எடுத்த கதை உங்களுக்கு தெரியுமா?
பரந்தக பாண்டியன் படையெடுத்து வந்து துவம்சம் செய்து, பின் அன்றைய அனந்தபுரம்(இன்றைய திருவனந்தபுரம்)தில் இருந்த கோயிலுக்கு தங்க விளக்கு வாங்கிக்கொடுத்த கதை தெரியுமா?
பரந்தக பாண்டியன் படையெடுத்து வந்து துவம்சம் செய்து, பின் அன்றைய அனந்தபுரம்(இன்றைய திருவனந்தபுரம்)தில் இருந்த கோயிலுக்கு தங்க விளக்கு வாங்கிக்கொடுத்த கதை தெரியுமா?
இன்னும் பல வரலாற்று கதைகள் உண்டு. நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளும், பட்டையங்களும் கேரளாவில் பாண்டியர் அடையாளங்களை சொல்கிறது. உங்கள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலும் கொஞ்சம் உள்ளது, தேடி வரலாற்றை படியுங்கள்.
இறுதியாக,
நம்பூதிரிகளை, "குனிந்தும், படுத்தும்" கவனித்து, அரசவை மற்றும் அதிகார செல்வாக்கை உருவாக்கி, அந்த பலத்தில் தனக்கு கீழ் இருந்தவனை சவுட்டி 'யாமானே' என கதற வைத்த ஜென்மிகள் காலமில்லை இது. நீண்ட போராட்டங்களுக்கு பின், கடும் உழைப்பாலும், கல்வியாலும் முன்னேறி பொருளாதார தன்னிறைவை எட்டிய தமிழ் சமூகங்கள் தன் முன்னோர் வரலாறை மீள்வாசிப்பு செய்யும் காலம். அந்த சமூகங்கள் வசிக்கும் மண்ணில் இருந்து தான் இப்படி நக்கல் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள்
கடந்தகால வரலாறுகள் தொடர்பாக உரையாட நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். இதை இப்படி வன்மத்தை தான் தொடர்வீர்கள் என்றால், இப்போது எழுதிக்கொண்டிருப்பது போல எப்போதும் எங்கள் பேனா முனை மட்டும் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்காது.
இப்படிக்கு,
இலட்சக்கணக்கான குமரி தமிழர்களின் ஒருவன்
ஸ்டாலின் பெலிக்ஸ் ம
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155978231352780
.....................
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155978231352780
.....................
இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் Rev. சாமுவேல் மீட்டீர் எழுதிய The Gospel of south india என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
திருவனந்தபுரம் கோட்டையில் இருந்த 'ஐந்து பாண்டியர்' சிலையில் ஒன்று என அந்த குறிப்பு சொல்கிறது. அப்படியென்றால், அந்த சிலை இப்போது எங்கே உள்ளது?
பாண்டியர் படம் திருவனந்தபுரம் கோட்டையில் இருக்கிறது என்றால், முந்தைய பாண்டியர் செல்வாக்கு எந்த அளவுக்கு இன்றைய கேரளாவில் இருந்தது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டிய ஒன்று..
பாண்டியர் படம் திருவனந்தபுரம் கோட்டையில் இருக்கிறது என்றால், முந்தைய பாண்டியர் செல்வாக்கு எந்த அளவுக்கு இன்றைய கேரளாவில் இருந்தது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டிய ஒன்று..
கண்டன் வீரநாராயண பாண்டிய கோட்டையை புதுப்பிக்க நண்பர்கள் கோரிக்கை வைத்ததும், அதை நக்கல் அடித்து 'இரணியல் பாண்டி அரண்மனை' என ஏழுதும் கன்னியாகுமரி மலையாளிகளுக்கு, திருவனந்தபுரத்தில் இருப்பதும் எங்கள் அடையாளமே என திருப்பி அடித்தால் தான் அடங்குவார்கள் போல..
https://www.facebook.com/shares/view?id=1979806868952694
https://www.facebook.com/shares/view?id=1979806868952694
ஜெர்மனி தேர்தல்2017
ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின், சுமார் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தீவிர வலதுசாரி கட்சி(AFD) ஒன்று ஜெர்மன் பாராளுமன்றத்தில் 'எதிர்க்கட்சி'யாக நுழைய இருக்கிறது.
தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக்கணக்கான அகதிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இது நல்ல செய்தி அல்ல..
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155971856007780
.............................
#Bundestagswahl17
#btw17
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155971856007780
.............................
ஜெர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியான SPD, மெர்கலின் CDU வோடு கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதில்லை என அறிவித்து இருக்கிறது.
இனி, CDU வோடு அணி சேர மிஞ்சி இருப்பது FDP (10%) யும், Green பார்ட்டியும்(9%) தான். இரண்டு கட்சிகளுமே கொள்கை அளவில் முரண்பாடுகளை கொண்ட கட்சிகள். இரண்டுமே, கூட்டணி ஆட்சிக்காக தங்கள் கொள்கைகளை தளர்த்திக் கொள்ளப்போவதில்லை என அறிவித்து இருக்கின்றன.
இடியப்ப சிக்கல் காத்திருக்கிறது முன்னாள் இயல்பியலாளரான மெர்க்கலுக்கு..
:-)
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17
#Jamaica_Coalition
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155972554402780
........................
#Bundestagswahl17
#btw17
#Jamaica_Coalition
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155972554402780
........................
ஜெர்மன் சுவர் வீழ்ந்து சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்ட பிறகும், கிழக்கு ஜெர்மானியர்களுக்கும் மேற்கு ஜெர்மானியர்களுக்கும் இருக்கும் 'மன' இடைவெளி இந்த தேர்தலிலும் வெளிப்பட்டு இருக்கிறது.
நாஜிக்களின் வீழ்ச்சிக்கு பிறகு, கிழக்கு ஜெர்மனி சோவியத்தின் பக்கம் போய்விட, மேற்கை அமெரிக்காவும், பிரான்சும் பங்கிட்டுக் கொண்டன. சோவியத்தின் நிழல், ஸ்டேசி, ஸ்டாலினிசம் என இறுக்கமான ஒரு சூழல் கிழக்கில் இருக்க, மேற்கில் தாராளமயமும் வேலைவாய்ப்புகளும் நிரம்பி வழிகிறது. கியூபா, வியட்நாம் என ஒருசில அயலாரை கம்யூனிச கிழக்கு ஜெர்மனி 'guest'களாக கொண்டு வர, மேற்கிலோ துருக்கியில் இருந்தும், பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குவிய துவங்குகிறார்கள்.
கிழக்கும் மேற்கும் இணைத்த பிறகு, கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக்கணக்கான ஜெர்மானியர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆயினும் ஜெர்மானியர்கள் தவிர, புதிய மனிதர்களை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ள அவர்கள் வளர்ந்த சூழல் பெரும் தடையாக இருக்கிறது.
2015 ல் ஜெர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிக்க, "முணுமுணுப்புகள்" அதிகம் கேட்டது கிழக்கு ஜெர்மனியர்களிடமிருந்தே. இந்த தேர்தலிலும் கிழக்கு ஜெர்மனியர்களின் எண்ணவோட்டம் ஓட்டுக்களில் பிரதிபலித்து இருக்கிறது. 2013 ல் துவங்கப்பட்ட தீவிர வலதுசாரி கட்சியான AFD க்கு மேற்கு ஜெர்மனியில் இருந்து 10 ஓட்டுகள் கிடைத்தால், 20 ஓட்டுக்கள் கிழக்கு ஜெர்மனியில் இருந்து கிடைத்திருக்கிறது. அதாவது 1:2 என்ற விகிதத்தில். நான்கே ஆண்டுகளில் ஜெர்மனியின் மூன்றாவது பெரிய கட்சியாகி, பாராளுமன்றத்தில் முதன்முதலாக நுழையப்போகிறார்கள் AFD யினர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, ஜெர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் நிறைய திருப்பங்களை தரக்கூடிய அரசியல் காத்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.
Subscribe to:
Posts (Atom)



















