Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, October 31, 2011

அண்டி கிறிஸ்து

அண்டி கிறிஸ்து எப்படியாவது பிறந்து விடுவான் சீக்கிரம் உலகை அழித்து விடுவான் என கிளிப்பிள்ளை போல் சொல்லி கொண்டும், நம்பிகொண்டிருந்த நிக்கர் போட்ட காலகட்டம். அண்டி கிறிஸ்த்து அழகாக இருப்பான், அவனுடைய தலையில் 666 என எழுதப்பட்டு இருக்கும் என்ற சித்திரம் எங்களுக்குள் உருவாக்கப்பட்டு இருந்தது.

சில நேரங்களில் வெளிநாட்டுகளில் அண்டி கிறிஸ்து பிறந்தே விட்டான் என ஊரில் வயதான கிழவிகள் பேசி கொண்டு இருப்பார்கள். எனக்கு வரும் சந்தேகங்களை தீர்த்து வைப்பது மலர் அக்கா தான். இது போன்ற கதைகள் உண்மையா என கேட்டால் போதும் கையும், காதும் வைத்து சொல்லி விடுவாள். அவன் பிறக்காமல் இருக்க தினமும் ஜெபம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லுவாள். என்னை போன்ற நிக்கர் சிறுவர்களில் ஒவ்வருவர் மனதிலும் ஒரு அசைக்க முடியாத வாதையாக அவன் அந்நாட்களில் உருவெடுத்து நின்றான். ஒவ்வருவர் மனதிலும் ஒவ்வரு சித்திரம் வரைந்து வைத்திருந்தோம். பாதிரியார் கோயில்களில் அவனை பற்றி சொல்லாத போதும் எங்கள் ஜெபங்களில் அவன் பிறக்ககூடாது என்று சொல்லி கொண்டோம்..

Anti Christ என்பதை தான் அண்டி கிறிஸ்த்து என சொல்கிறார்கள் என புரிந்து கொள்ள ஆரம்பித்த பயம் போன வயதுகளில் கோயில் செல்லாத ஒரு இளவட்டம் ஊரில் உருவாகி இருந்தது. ஞாயிற்று கிழமை என்றாலே எங்கள் வாசம் ஊர் எல்லையில் இருக்கும் குளக்கரை தான். ஏறக்குறைய அண்டி கிறிஸ்த்து பற்றிய கற்பிதங்கள் அப்போது மனதில் இருந்து மறைந்து இருந்தது.

மலர் அக்காவுக்கு அப்போது திருமணமாகி, மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. குளத்தின் பெண்கள் சப்பாத்தில் (பெண்கள் குளிக்கும் பகுதி) குளித்து விட்டு தன் குழந்தையோடு வந்து கொண்டிருந்தாள். ஊருக்குள் செல்வது என்றால் ஆண்கள் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். பூசை துவங்குவதற்கு அடையாளமாக சேரிக்கடை வேத கோயிலின் மணி ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது. வலது கையில் குழந்தையை இழுத்தவாறு மணி ஓசை வந்த திசையை பார்த்தவாறே பக்தியாய் முணு முணுத்தவாறு எங்களை கடந்தாள்.

சுனில் மெல்ல தலையை திருப்பி "அக்கோ.. ஓடி போ, மணி அடிச்சாச்சி.... சாமியாரு ஆசிர்வாதம் கொடுத்துட்டாருன்னா அப்புறம் கிடைக்கவே செய்யாது"

சட்டென எங்களை ஊடுருவி ஒருமுறை முறைத்து "போங்கல அண்டி கிறிஸ்துக்களா' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தாள்.
ஏறக்குறைய எங்கள் மனதில் இருந்து அழிந்தே போன அண்டிகிறிஸ்து எங்கள் முன் இருப்பதாக நினைத்தோம்; நாங்களே அண்டிகிறிஸ்து ஆனதை எண்ணி உரக்க சத்தம் போட்டு சிரித்தோம்.. தலையை தடவிக்கொண்டோம் துரதிசடவசமாய் யார் தலையிலும் 666 இல்லை.

Wednesday, June 29, 2011

கடவுள் சிரித்தார்

மெட்ராஸ் அப்போது சென்னை ஆகவில்லை. பட்டய படிப்பு முடித்து விட்டு மெட்ராசின் மூலை முடுக்கெல்லாம் வேலைக்காக சுற்றி திரிந்த காலம். அன்று சென்னை எக்மோர் பகுதியில் அலைந்து விட்டு, பட்டினப்பாக்கம் செல்லும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

'சார்' என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தால் மாநிறத்தில் கந்தலான உடை, பரட்டை தலையென சுமார் பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அருகில் நின்றிருந்தான்.

'என்னப்பா'? என கேட்டேன்.

'என் பேரு சரவணன். சொந்த ஊரு திருச்சி . ஊர்ல நானும் அம்மாவும் இட்லி சுட்டு பொழச்சிக்கிட்டு இருந்தோம். மெட்ராஸ்ல பெரிய ஹோட்டலுல வேல வாங்கி தரேன்னு சொல்லி கூப்பிட்டாரு. இந்த அட்ரஸ்ல போய் பார்த்தா அவரு ஒரு வாரமா வேலைக்கே வரலன்னு சொன்னங்க. நானும் ரெண்டு நாளா வேற எங்கையாவது வேல கிடைக்குமான்னு தேடி பாத்தேன். கிடைக்கல.. ஊருக்கு போக காசில்ல, நீங்க தர முடியுமா ?'

அனுபவம் தந்த பாடங்களால் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். அவன் கையில் வைத்திருந்த துண்டு சீட்டை வாங்கி பார்த்தேன். எக்மோரில் ஏதோ ஒரு உணவகத்தின் பெயரும், முகவரியும் எழுதப்பட்டு இருந்தது.என் மவுனத்தை புரிந்து கொண்ட அவன் 'சார் இந்த வாட்சை வச்சுக்கோங்க சார், டிக்கெட் மட்டும் எடுத்து குடுங்க பணம் வேண்டாம்'.டிக்கெட் விலைக்கு பெறுமானம் கூட வராத வாட்ச் ஆனாலும் அவன் டிக்கெட் மட்டும் எடுத்து கொடுங்கள் என்று சொன்னது அவன் மேல் இன்னும் நம்பிக்கையை ஊட்டியது.
'வாட்ச் எல்லாம் வேண்டாம் பா.. டிக்கெட் எவளவு ரூபாய் தெரியுமா' என்று கேட்டேன். 'தெரியாது சார்' என்றான் வாயை சுளித்து.
'வா கேட்கலாம்' என்று டிக்கெட் கவுண்டருக்கு போய் பயண சீட்டு கேட்ட போது என்னிடம் இருந்த பணத்தை காட்டிலும் அதிகமான தொகையாக இருந்தது.

'சார்' என பின்னால் இருந்து ஒரு குரல் அழைத்தது. திரும்பி பார்த்தால் கையில் இரண்டு கால்களும் ஊனமான ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். 'நீங்க திருச்சிக்கு டிக்கெட் கேட்டதை பார்த்தேன், ஊனமுற்றோர் சலுகையில என்கூட ஒருத்தர் ஒன் தேர்ட் டிக்கெட் எடுத்து கூட வரலாம், நீங்க விருப்பப்பட்டா என் கூட வரலாம்'

பின்னால் பயண சீட்டு எடுக்க வந்தவருக்கு வழியை விட்டு வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். ' கடவுளே... ஒருவருக்கு மானசீகமாகவே உதவி செய்ய விரும்புகிறேன். என்னிடம் இந்த சிறுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு பணம் இல்லை. நீ உண்மையிலேயே இருக்கிறாய் என்றால் உதவு பார்ப்போம்' என அறியாத பரம்பொருளிடம் சவால் விட்டேன்.

ஒரு நிமிடம் உறைந்து விட்டேன். என்ன திருவிளையாடல் இது. இப்படி கூடவா ஒருத்தருக்கு உதவி கிடைக்கும். நாக்கு தளுதளுத்தது. மேற்படி பேச முடியாமல் திருச்சிக்கு டிக்கெட் எடுத்தோம்.

உடனடியாக அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் இருவருடன் நானும் சென்று சற்று நேரம் ரயிலில் உட்கார்த்து பேசினேன். ரயில் கிளம்ப போகும் நேரம் எதோச்சையாய் ஞாபகம் வந்து 'சாப்பிட்டியப்பா' என சரவணனை கேட்டேன். 'இல்லை அண்ணா' என சன்னமான குரலில் சொன்னான். கையில் இருந்த பத்து ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து விடை பெற்றேன்.

எக்மோரில் இருந்து வீட்டுக்கு செல்ல வேண்டுமே. பாக்கெட்டில் துழாவி பார்த்ததில் வீடு போய் சேர்வதற்க்கான காசு தேறாது என்று தோன்றியது. சரி பரவாயில்லை,கடவுள் விட்ட வழி.. காசு இருக்கிற தூரம் வரைக்கும் டிக்கெட் எடுத்து விட்டு பின் நடத்து போய் விடலாம் என கணக்கிட்டு பட்டினப்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினேன். இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது..

பள்ளி நண்பன் ஒருவன் பேருந்தில் டிக்கெட் கேட்டு நின்றுக்கொண்டு இருந்தான். என்னை பார்த்ததும் 'உனக்கு எங்க போகணும்' என கேட்டு எனக்கான பயணச்சீட்டையும் அவனே எடுத்துக்கொண்டான். அவனது முகத்தை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி பார்த்தேன். மேகத்தினூடே கடவுள் சிரிப்பது போல் இருந்தது.

-

பண்புடன் சித்திரைத் திருநாள் சிறப்பு போட்டியில் பரிசு பெற்ற கதை

Wednesday, August 26, 2009

எதிர் வீட்டுக்காரம்மா



"நிஜமாவா சொல்ற?" ஆச்சரியத்தோடு மனைவியை நோக்கி கேட்டேன். லாட்டரியில் பரிசு விழுந்தது என சொல்லியிருந்தால் கூட இத்தனை ஆவேசமாக கேட்டிருப்பேனா என சந்தேகம்...... 'அப்படி என்ன' என்று யோசிக்கிறீர்களா?...... நாங்கள் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் இருக்கும் எதிர் வீட்டுக்காரம்மா என் மனைவியிடம் பேசியிருக்கிறார்கள்.

'யோ.....'-பொறுங்கள் நீங்கள் முறைப்பது புரிகிறது.. எதிர் வீட்டில் இருக்கும் அந்த பெண்மணியை பற்றி முழுதாய் தெரிந்திருந்தால் இப்படி முறைக்க மாட்டீர்கள்...... 'ஓ.....அப்படியா' என கேட்பீர்கள்........

பேச்சுலராய் சுமார் 10 ஆண்டுகளாக சேவல் பண்ணையில் காலத்தை ஓட்டி விட்டு, திருமணமான புதிதில் மனைவியோடு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடி வந்தேன்...... இங்கே குடி புகுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வந்திருந்தேன். பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ஆயிற்றே நாமாகவே அறிமுகப்படுத்தி கொள்வோம் என்று ஆர்வமிகுதியால் காலிங் பெல்லை அழுத்த, நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் கதவை திறந்தார்.

நான் தான் பேசிக்கொண்டிருந்தேனே ஒழிய அவரிடம் இருந்து ம்.... ஹும்..... என் கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்...... அவருடன் பேசிக்கொண்டிருந்த அந்த இரண்டு நிமிடங்களிலும் வீட்டை கண்களால் ஒரு நிமிடம் அலசி விட்டேன்.

மத நம்பிக்கை மிகுந்த குடும்பம் என்று சுவரில் இருந்த புகைப்படங்கள் காட்டியது, தொலைக்காட்சியில் 1:30 மணிக்கு வரும் தொடரின் நாயகியின் சோகத்தை பங்கெடுத்து கொண்டிருந்தார் அவருடைய மனைவி(எதிர் வீட்டுக்காரம்மா). அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இருப்பதற்கான முகாந்திரமே இல்லை.
நான் பேசி திரும்பிய போது சம்பிரதாயமாக என் பெயரை கேட்டார், நானும் சொல்ல, மேலும் அவருடைய முகம் இருண்டு போனது தான் மிச்சம்........ அவருக்கான "நான்" அல்ல என்பது மட்டும் புரிந்தது.

மனைவியோடு குடி வந்த முதல் மாதத்தில் நேருக்கு நேராக சந்தித்த போதும் கூட எங்கள் புன்னகைக்கு பதிலாக சம்பிரதாய புன்னகையை மட்டும் உதிர்த்து போனார்கள்......

பெரும்பாலான நேரங்களில் வீடு பூட்டியே இருந்தது..... நானும் அவர்களிடம் பேச வேண்டும் என்று ஓரிரு முயற்சிகளுக்கு பின் முயற்சிக்காமலே விட்டு விட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்....'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்று சொல்வார்கள். அது போல தான் இன்றும் நடந்திருக்கிறது...... அது தான் என் ஆச்சரியத்துக்கு காரணம். வட இந்தியாவில் கணவரோடு வாழ்ந்து கொண்டிருந்த அவருடைய ஒரே மகள் கர்ப்பமுற்று அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். என் மனைவி ஏழு மாத கர்ப்பிணி ஆனதால் "எந்த மருத்துவமனைக்கு செல்கிறீர்கள், எங்கே பரிசோதனை செய்துக்கொண்டிருகிறீர்கள்" என்று கேட்பதற்கே இத்தனை நாள் வனவாசத்தை உடைத்து இன்று பேசியிருக்கிறார்......

அவர் பதில் பெற்று கொண்டதோடு விட்டிருக்கலாம். கேள்வி என் மனைவியை நோக்கி திரும்புகிறது.
"உனக்கு பிரசவம் அந்த ஆஸ்பத்திரியிலையாம்மா பாப்பாங்க?"
"இல்லங்க..... நாங்க ஊருக்கு போயிருவோம்"
"ஐயோ... ஊருக்கா? எப்போ, எப்படி போவீங்க?"
"அடுத்த வாரம், ரயில்ல"
"ரயில்லையா..... கர்ப்பிணி பொண்ணுங்க கடலு, ஆறு தாண்டி போக கூடாதுண்ணு சம்பிரதாயம் இருக்கு தெரியுமா?"

என் மனைவி என்ன பதில் சொல்லியிருப்பாள் என நான் கேட்கவே இல்லை.ஏனோ நீண்ட நாட்களுக்கு பின் பெரியாரை படிக்க தோன்றியது...... .