Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Sunday, February 10, 2019

பால்ய கால (ஊர்) சினிமாக்கள்

'படம் போடுன்மாம்', இந்த வார்த்தைகளை கேட்டால் காதில் தேன் வடிந்தது போல இருக்கும். 80 களில் ஊரில் எங்காவது ஒரு வீட்டில் டிவி இருந்தாலே ஆச்சரியம். அதுவும், தமிழ் சினிமா எல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'மாநில மொழி திரைப்படம்' வகையில் வந்தால் தான் உண்டு. அன்று பார்த்து மின்சாரம் போய் விட்டால், மீண்டும் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும். 'மலையாளம்' எல்லாம் அன்று தொலைக்காட்சி வழியாக கற்றது தான்.
இந்த காலக்கட்டத்தில் தான் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற ஊர் அண்ணன்கள் வீடுகளுக்கு டி.வியோடு திரும்பி வர துவங்கினார்கள் சிலர் 'டெக்' கோடு.
கொண்டுவந்த டிவியை ஊருக்கு காட்ட போடுகிறார்களா? சுயபெருமிதத்திற்காக போடுகிறார்களா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், எங்களை போல வாண்டுகளுக்கு அது தான் "ஜாக்பாட்". பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவோ, சனிக்கிழமையோ படம் போடுவார்கள். இரண்டு பேருக்கு தெரிந்தால் போதும், ஒரு 100 பேராவது கூடி விடுவார்கள். போடப்படும் படங்களின் பெயர்களும் எப்படியாவது கசிந்துவிடும். குறைந்தது 4,5 கேசட்டுகள் என்று விடிய விடியப் படம் போடுவார்கள். அதும் திரைக்கு வந்து சில வருடங்களே ஆன திரைப்படங்கள். ரஜினியின் 'மாப்பிள்ளை, பணக்காரன்' எல்லாம் இப்படி தொலைக்காட்சியில் போடப்பட்டு பார்த்த திரைப்படங்கள் தான்.
இரண்டு படங்கள் ஓடி முடியும் முன்பே கண்கள் சொக்கும், அடுத்தநாள் படம்பார்க்க வராத நண்பர்களிடம் தம்பட்டம் அடிப்பதற்காகவே கண் சிவக்க சிவக்க படம் பார்ப்போம். நாம் விரும்பிய படத்தை நான்காவதாக போடுகிறார்கள் என்றால், கூடவே இருக்கும் நண்பர்களிடம் அந்த படத்தை போடும் போது எழுப்ப சொல்லி அப்படியே தரையில் கிடந்து உறங்கிய நாட்களும் உண்டு.
இப்படியெல்லாம் படம்பார்க்க அனுமதியெல்லாம் வீட்டில் எளிதாக கிடைத்து விடாது. ஊரின் நம்பிக்கையான ஒரு அண்ணன் யாராவது அந்த இரவுநம்மை 'கார்டியனாக' ஏற்றுக்கொள்கிறேன் என சொல்லி ஜாமீன் அளித்து, அந்த வார இறுதியின் வீட்டுப்பாடங்கள் எல்லாம் செய்து முடித்து ஒப்பித்தால் தான் அனுமதி கிடைக்கும். சினிமா போடும் நாட்களுக்கு ஒருவாரத்திற்கு முன் 'Progress Report' கிடைத்திருந்தால், உள்ளதும் போச்சு; போய் கேட்கவே முடியாது. 'எப்படா மீசை முளைக்கும்! தனியாக போய் படம் பார்க்கலாம்' என்று நினைத்து அழுதுக்கொண்டே தூங்கி விடுவோம்.
வெளிநாட்டுக்கு போய் வந்தவர்கள் கொண்டு வந்த டி.வி தவிர்த்து, வாடகைக்கு டி.வி எடுத்து போடுவார்கள் இளந்தாரிகள். முந்தையதை போல இந்தவகை சினிமா பார்பதற்கும் அதே மவுஸ் என்றாலும் சில நேரம் 'காசு கேட்கும்' அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இன்னொன்று, ஊரில் யாருடைய திருமணத்திற்க்காவது வீடியோ எடுத்திருந்தால், அவர்களுடைய 'கல்யாண கேசட்' கிடைக்கும் நாள் எங்களுக்கு திருநாள். என்ன ஒரே சிரமம் என்றால், அவர்கள் கல்யாண வீடியோவை முழுமையாக போட்டு விட்டு தான் வேறு சினிமாக்கள் போடுவார்கள். அதுவும், புது பொண்ணோ, மாப்பிளையோ படம்பார்க்க வர தாமதமானால், Black TV ஐ நாங்களும் தேமே என பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
இன்னொன்று, ஊரில் யாரையாவது வெறிநாய் கடித்தால், சம்மந்தப்பட்ட நபர் 90 ஆவது நாள் தூங்கக்கூடாது என்ற நம்பிக்கை ஊரில் இருந்தது. அன்று அந்த வீட்டில் விடிய விடிய படம் ஓடும். மற்ற இடங்களை விட, இந்த கேட்டகிரியில் படம்பார்க்க ஆட்கள் குறைவாக இருக்கும் என்று நான் எழுதி தான் தெரிய வேண்டுமா என்ன? 
இரண்டு வீடுகளுக்கு இடையே இருக்கும் ஈ.கோ வும் இந்த நாட்களில் ஊருக்கு தெரியவரும். அதாவது வெளிநாட்டுக்கு போய் வந்த ஒருவர் 4 படம் போட்டால், அடுத்த வீட்டுக்காரர்கள் சில மாதத்தில் 8 படம் போட்ட வரலாற்றை எல்லாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.
இதை தவிர கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் பெரிய திரை தான். பெரும்பாலும் மதநம்பிக்கை சார்ந்த திரைப்படங்களே அங்கு போடப்படும். என்ன ஒன்று, ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அங்கே கூடுதலாக இருக்கும்.
90 களில், ஒவ்வொரு வீடுகளிலும் தொலைகாட்சி எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற 'விடிய விடிய படம்' கூத்துக்கள் குறைய துவங்கியது. ஊரின் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்புக்கும் ஒரு கிரிக்கெட் டீமும், ஒரு இயக்கமும் ஆரம்பமானது. ஆம், எங்களுக்கும் அந்நேரம் மீசை முளைக்க துவங்கி விட்டது. எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு டீம் துவங்கி, ஆண்டுவிழாக்கள் நடத்தி பெரிய திரையில் சினிமாக்கள் போட துவங்கினோம்.
................
80 களில் அவ்வளவு பரபரப்பாக இருந்த 'சினிமா போடுதல்' 2Kவில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய் விட்டது. சினிமாவின் இடத்தை, பாட்டுக்கச்சேரியும், நடன நிகழ்சிகளும் பிடிக்க ஆரம்பித்தது.
சென்ற வாரம் மக்களோடு, ஒரு தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். பாதிபடம் முடிவதற்குள் தூக்கம் வந்து, தூங்கப்போகிறேன் என்று சொல்லிப்படுத்து விட்டேன். ஒருகாலத்தில் நான்கைந்து படங்களை எப்படி இப்படி சுவாரசியம் குறையாமல் பார்த்தோம் என்பதை நினைக்கும் போதே அயர்ச்சியாக இருந்தது.
ஆனால், அந்த படம்பார்த்த நாட்களின் நினைவுகள் மட்டும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் அப்படியே மனசுக்குள் கிடக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157167983817780

Thursday, December 6, 2018

திருவாங்கூரின் கடைசி பிரஜை

எங்கள் ஊரின் கடைசி திருவாங்கூர் பிரஜையான 'கிராப்பு தாத்தா' என்ற தாசையன் தாத்தா மறைந்தார்.
ஏன், திருவாங்கூர் ஆட்சியில் பிறந்து, வளர்ந்த வேறு யாரும் ஊரில் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால், 100 ஆண்டுகள் கடந்த ஒரே முதியவர் இவரே. மட்டுமல்லாது, மன்னர் ஆட்சியை கடந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆன பின்னும் அவரது நினைவிலும், வாழ்வியலிலும் சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசை, 'மன்னர் ஆட்சி'யின் நீட்சியாகவே நினைத்தே வாழ்ந்தார்.
ரூபாய் க்கு நாம் எப்போதோ மாறி இருந்தாலும், அவரோ ரூபாயை திருவாங்கூரின் 'சக்கறம்' என்பார். அரசும், கவர்மெண்டும் அவருக்கு எப்போதும் 'சர்க்காரே'.. போலீஸ் மீதான அதீத பயம் அவருக்கு இருந்தது. அதே வேளையில், போலீஸ் ஸ்டேசன் வாசலை ஒருநாள் கூட மிதித்ததில்லை என்ற பெருமிதமும் அவருக்கு இருந்தது. அரசு-சாமானியன், இதற்கு இடையே இருக்கும் ஒருவிதமான மிரட்சியான அரசியலை அவரது வாழ்க்கையை அவதானித்து நிறைய உள்வாங்கிக் கொண்டேன்.
ஊரின் மிகச்சிறந்த 'பனையேறி'. அவர் பனை ஏற கற்றுக்கொண்டவை எல்லாம் மூன்றாம் தலைமுறையிலும் பேசப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட ஆசிரியரின் அடிக்கு பயந்து அவரும் இன்னொரு பெரியப்பாவும் ஊர் சுற்றுவார்களாம். அந்த நேரத்தில் பொழுதுபோக, 'யார் அதிக உயரத்தில் பனை ஏறுகிறார்கள்?' என்பது தான் அவர்களுக்குள் நடக்கும் போட்டி. ஒருவர் ஏறிய தூரத்தை விட இன்னொருவர் அதிகம் ஏறி, எச்சில் துப்பி வைப்பார்களாம். அதை இன்னொருவர் தாண்டி விட்டால் அன்று அவர்கள் தான் "வின்னர்". இப்படி பள்ளி 'கட்டடித்து' ஏற துவங்கிய அவர்கள் பனையேற்றம், வெகு சிறுவயதிலேயே தொழிலில் இறக்கி விட, ஊரின் மிகச்சிறந்த பனையேறிகளாக இருந்திருக்கிறார்கள். பெரும்பாலான மரம் ஏறிகளின் வாழ்க்கையை போல மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டதும், பின் மலைகளை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு மாறி இருக்கிறார்.
தாசையன் என்ற அவரது இயற்பெயரில் எப்படி 'கிராப்பு' என்ற பட்டப்பெயர் தொத்திக்கொண்டது என்று தெரியவில்லை. ஆனாலும் ஊரில் இன்றும் எல்லோருக்கும் அவர் 'கிராப்பு' தாத்தா தான்.
ஆம், கிராப்பு தாத்தா எனக்கு யார்? எனது தந்தை வழி உறவினர். குமரி பாஷையில் 'அருவக்காரங்க'. நான் பிறந்துவளர்ந்த வீட்டின் முன்வீடு தான் அவர்கள் வீடும். எனது தந்தையின் சிறு வயதிலேயே அவருடைய அப்பா தவறி விட்டதால், எனக்கு 'முதல் தாத்தா' வாக அறிமுகமானது கிராப்பு தாத்தா தான்.
மரவள்ளி கிழங்கு இலையை தின்று சாவக்கிடக்கும் ஆட்டின் காதை அறுத்து அதை உயிர்ப்பிக்கும் வித்தையை அவர் மூலம் தான் கற்றுக்கொண்டேன். அவர் வீட்டில் வளர்ந்த 'டைகர்' என்ற நாட்டு நாய் தான் என் முதல் செல்லப்பிராணி.
நான் 10 வயதுக்குள் இருக்கும் போது அவர் 70 களில் இருந்தார். இருள் குறித்தும், பேய்கள் குறித்தும் அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அவரது வீட்டு திண்ணையில் தான் அவரது ஊணும், உறக்கமும். ஊரில் அவரோடு வெற்றிலை சாப்பிடும் நண்பர்கள் இறந்து போனால், இரண்டொரு நாட்களில் அவர்கள் மீண்டும் இரவு வந்து திண்ணையில் உறங்கிக்கொண்டிருக்கும் இவரிடம் வெற்றிலையும், சுண்ணாம்பும் கேட்டதாக சொல்வார். பெரும் மிரட்சியோடு அவர் சொல்லும் விசயங்களை பயத்தோடு கேட்டுக்கொண்டிருப்போம். இரவு அவருக்கு பிடிக்காது, இரவில் வெளியே சுற்றுவதும் அவருக்கு பிடிக்காது. இரவில் எத்தனை மணிக்கு அவர் வீட்டு முன் நடக்கும் சத்தம் கேட்டாலும், திண்ணையில் இருந்து விழித்து, "இது யாரு?" என கேட்பார். "தாத்தா, நான்தான்" என்றால். "இந்த செம்பாதிக்கு எங்கல கறங்கீட்டு நடக்குதியா?...." என கோபப்படுவார்.
"ஏன் முன்ன மாதிரி இப்ப பேய் இல்ல..." என கேட்டால், "விளக்கு(மின்சாரம்) இருக்கியனால பேய் வரல" என்பார். அமானுஷங்கள் மீதான பயத்தின் சாரம் அவரது பேச்சின் தொடர்ச்சியாக தான் எங்களுக்கு வந்திருக்க வேண்டும்.
கிராப்பு தாத்தாவின் மனைவி நான் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்கள். மரணத்தின் வாசனை புரியாத வயதில் "ஏன் கிராப்பு தாத்தாவுக்கு, பாட்டி இல்லை?" என அம்மா,பெரியம்மாவிடம் கேட்டிருக்கிறேன். "அவங்க ஏரோபிளேன்ல வெளிநாடு போயிருக்காங்க" என்பார்கள். "தாத்தா அப்போ ஏன் வெளிநாடு போவேல?" என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைத்ததில்லை. ஆனால், இன்று கிடைத்து விட்டது. இனி திரும்பி வரவே முடியாத வெளிஉலகுக்கு அவர் சென்று விட்டார்.
நூறு வயதை கடந்து வாழ்த்து மறைந்த ஒரு பாட்டனின் மறைவில் வருத்தமா என்றால்.. வருத்தம் தான். 5 தலைமுறைகளை கண்ட ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சியை அருகே இருந்து வழி அனுப்ப முடியவில்லையே என்ற வருத்தம். இன்னும் 17 நாட்களில் 'கிறிஸ்மஸ் விடுமுறை' வருகிறது. 'அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கலாமே தாத்தா' என்ற வருத்தம் வருகிறது.
எனது தந்தை வழி பூட்டனின் பெயர் 'சாமுவேல்'. அதற்க்கு முன்பே எங்கள் குடும்பம் மதம்மாறி இருந்தது. "நமது குடும்பம், எந்த காலத்தில் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இருந்து வெளியே வந்து கிறிஸ்தவத்தை தழுவிக்கொண்டது?" என்ற கேள்வியை கிராப்பு தாத்தாவிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டேன். ஆனால், அந்த கேள்விகளை உள்வாங்கிக்கொள்ளும் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. எங்கள் குடும்பத்தின் மதம் மாற்றம் சார்ந்த எனது தேடலுக்கான கடைசிக் கண்ணியும் தவறி விட்டதாகவே இந்நேரம் உணர்கிறேன்.
ஊர் பெரியவர்களில் மூப்பர் இவர் தான். அதனால் தான் இவரை இன்றுவரை 'மூப்பிலு' என்று பெரியவர்கள் அழைத்தார்கள்.
மூரியங்கோணத்தின் மகத்தான மரபொன்று விடைபெற்று இருக்கிறது. அவரை பார்த்து, வியந்து, பயந்து வளர்ந்த பெரும்பாலான இளந்தாரிகள் அவரை வழியனுப்ப இன்று அருகில் இல்லை.
என்ன சொல்ல?.... 'போய் வாருங்கள் தாத்தா!'

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157159835947780

Wednesday, February 29, 2012

வீட்டுக் கோழிகள்


கடந்த கோடையில் பண்டிகை ஒன்றிற்காக ஊருக்கு சென்றிருந்தேன். மீசை முளைக்கத் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே பண்டிகைகளின் முந்தைய நாளில் இளவட்டங்கள் சேர்ந்து ஊரின் ஒதுக்குபுறமாக ஏதேனும் சமைத்து, சாப்பிட்டு, கதை பேசி, மகிழ்ந்து, கலைந்திருக்கிறோம். இந்தத் தடவை என்ன செய்யலாம் என யோசித்து நாட்டுக் கோழியும், மரிச்சினி(மரவள்ளி) கிழங்கும் சாப்பிடலாமே என எனது ஆசையை தெரிவித்தேன்.




நமட்டு சிரிப்புடன் பங்காளி ஒருவன் "இங்க களவாணக்கு கூட கோழி கிடச்சேல , உனக்கு வெலைக்கு வாங்கக்கா கெடச்சம்"
என்றான்.
"சீசன் நேரம் ஆனதாலஇப்ப கடையில கூட கிடச்சாது மக்கா" இன்னொரு நண்பன்.
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்பதை விட ஊரில் யாருமே தற்போது வீட்டுக் கோழியே வளர்ப்பதில்லை என்ற செய்தியே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்தது.

நகரம் உலகமயமாக்கல் என்ற தனது அகோர நாக்கைக் கொண்டு கிராமங்களைத் தன்பக்கமாக இழுத்து வருகிறது... கிராமம் அதன் தொன்மையையும், தனித்தன்மையையும் தன்னை அறியாமல் இழந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.

உணர்ச்சிவசப்படாமல் யோசித்து பார்த்த போது உண்மை புலனாகத் துவங்கியது.கோழியை வளர்த்தெடுப்பதற்கோ, வாங்குவதற்கோ, விற்பதற்கோ யாருக்குமே நேரமில்லை. பத்து வருடங்களுக்கு முன் ஊரில் ஒரே ஒரு பிராயிலர்கடை இருந்தது போய் இன்று ஐந்தாறு கடைகள் வந்து விட்டது. ஊரில் உள்ள இளவட்டங்கள் அனைத்தும் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு புலம் பெயர்ந்து விட... முதியவர்களின் விடுதி போல் பகல் நேரங்களில் கிராமங்கள் காட்சியளிக்கின்றது.



பால்யத்தில் எங்கள் ஊரில் கோழி வளர்க்காத வீடுகளே பார்க்க முடியாது. சைக்கிள் டயரை உருட்டியவாறு ஊரை ஒரு சுற்று சுற்றி வந்தால் ஒரு கோழி குஞ்சாவது காலில் மிதிபடும். 'இது **** வீட்ல உள்ள கோழியாக்கும்' என ஒவ்வொரு வீட்டில் வளரும் கோழியும் அவ்வீட்டின் ஒரு உறுப்பினராகவே ஊரை வலம்வந்தது.

சென்னையில் நான் தங்கியிருந்த மேன்சன் சமையலறையை விட பெரிதான அளவில் எங்கள் வீட்டில் கோழி கூடுஒன்று இருந்தது. பக்கத்தில் இருந்த சிறு நகரத்தில் அப்பா ஜவுளிக்கடை வைத்திருந்ததால் அம்மாவும், அப்பாவும் காலையிலே கிளம்பி விடுவார்கள். விடுமுறை நாட்களில் வேளாவேளை கோழிக்கு தவிடு வைப்பது, கோழி முட்டை இட்டிருந்தால் எடுத்து பத்திரமாக அரிசி பானைக்குள் வைப்பது, கோழிகளின் எண்ணிக்கையை சரிபார்த்து கோழிக் கூட்டைப் பூட்டுவது என எல்லா வேலைகளும் எனக்கே தரப்பட்டு இருந்தது.

சிறுவயதில் அம்மாவிடமிருந்து அதிகபடியான அடியை கோழிக் கூட்டை மூடவில்லை என்பதற்காகவே வாங்கி இருப்பேன். கோழிக் கூட்டை ஒழுங்காக மூடி இருந்தேன் என்றாலே அன்றைய வேலைகள் அனைத்தையும் சரியாக செய்திருக்கிறேன் என அர்த்தம்.

ஊரில் நரிகள் நடமாட்டம் அதிகமிருந்த காலகட்டம் அது. சரியாகக் கதவு சாத்தப்படாத கோழிக்கூடுகளை கன்னம் வைத்து நடு இரவில் ஒன்றிரெண்டை அப்பிக் கொண்டு போய் விடும். நரிகள் தவிர வெளியூர் நாய்கள், காட்டுப் பூனைகளுக்கும் வீட்டுக் கோழிகள் இலக்காவது உண்டு. குடும்ப திருமணங்களுக்காக வெளியூர் செல்லும் போது பக்கத்து வீடு மாமியிடம் கோழிக் கூட்டைப் பூட்ட அம்மா சொல்லிப் போவாள். ஆனாலும் "இண்ணைக்கு மைனி கோழி கூட்ட பூட்டிசின்மோ என்னமோ" - என அந்தி சாய்ந்தால் புலம்புவதை கேட்க முடியும்.



நரிகள், காட்டு நாய்கள், பூனைகள் இவை தவிர்த்து கோழிகளை பிடிக்க அலையும் மனித நரிகளும் உண்டு. மனித நரிகள் - ஆம், ஊரில் சுற்றி திரியும் இளந்தாரிகள். ஊர் எல்லையில் இவர்களுக்கு கிடைக்கும் வெதுவெதுப்பான சாராயத்திற்கு எதேனும் வீட்டுக் கோழியே துணையாகும்.

காட்டு நரிகள் கோழியை பிடித்துச் சென்றதா, இல்லை மனித நரிகள் பிடித்ததா என எளிதாக அடையாளப்படுத்தி விடலாம். காட்டு நரிகள் கோழிகளைப் பிடிக்கும் போது ஏறக்குறைய ஊர் எல்லை வரை கோழியின் இறகுகளை பார்க்கலாம். இன்னும் சற்று தள்ளிச் சென்றால் முழுதாய்த் தின்னாமல் சிதறிய கோழி பாகங்களையும் பார்க்கலாம். நரிகள் கோழிக் கூட்டுக்குள் சென்று கோழியைப் பிடிக்க முற்படும் போது கோழிகள் வெளிப்படுத்தும் சத்தம் மிகவும் அகோரமாய் இருக்கும். அப்போது ஊரில் ஏதேனும் பெரிசுகள் விழித்திருந்தால் அப்புறம் நரிக்காக காத்திருக்கும் துணைக்கு வேறு ஆள் பார்க்க வேண்டியது தான்.

இளந்தாரிகள் கோழி பிடிக்கும் விதமே அலாதியானது. ஏதேனும் ஒரு வீட்டின் கூட்டைக் கன்னம் வைத்து அவர்கள் இறங்கும் போது கண்டிப்பாக ஒரு நீள டார்ச்சும், தண்ணீரில் நனைத்த ஒரு கோணிப்பையும் இருக்கும். டார்ச்சை கொண்டு ஏதேனும் ஒரு கோழியின் கண்களில் அடித்துக்கொண்டே கோணிப்பையை கொண்டு கோழியை மூடும் போது ஒரு சத்தம் வராது. கடந்த பத்தியில் சொன்ன எந்த தடயங்களும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாக மனித நரிகளின் வேலையாகத் தான் இருக்கும்.அப்புறம் என்ன?!?!?! முகம் தெரியாத அந்த இளந்தாரிகளுக்கு, அவர்கள் அப்பாவுக்கு, அவர்கள் அம்மாவுக்கு என இரண்டு நாட்கள் முழுக்க வசையாகவும், சாபமாகவும் கோழியைப் பறிகொடுத்தோர் வீட்டில் இருந்து கிடைக்கும்.

இப்போதெல்லாம் பண்டிகை காலம் என்றாலே கறிக் கோழிக் கடைகளில் காத்திருக்கும் கூட்டத்தை அந்தக் காலத்தில் பார்க்கவே முடியாது. கிறிஸ்மஸ், புத்தாண்டு, ஈஸ்டர் என எல்லா பண்டிகைகளுக்கும் அடித்து புசிப்பதற்க்காகவே வீட்டில் சேவல் கோழிகள் வளர்க்கப்படும். விருந்தினர்கள் யாராவது வந்தால் வீட்டில் இருக்கும் பெரிய சேவல் கோழிகளே முதல் இலக்கு. எனது அம்மாவின் அம்மா வீட்டில் மிகப்பெரிய கோழிக் கூடு ஒன்று இருந்தது... அது நிறைய கோழிகளும். பண்டிகை நேரத்தில் தனது மகள்களுக்கு படி(பண்டிகை கால சீதனம்) கொடுக்க வரும் போது ஒவ்வொரு கோழியாக எல்லா மகள்களுக்கும் பரிசளிப்பாள்.

வீட்டுக் கோழி வளர்ப்பில் முக்கியமான காலகட்டம் நோய்க் கால பராமரிப்பு. ஏதேனும் கோழிக்கு நோய் தொற்றி விட்டால் அதைத் தனியாகப் பிரித்து வேறு ஒரு கூடைக்குள் அடைத்து மருத்துவம் பார்ப்பார்கள். மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக் கோழிகளுக்கு நோய்த் தடுப்பு ஊசி இட்டால் அது ஆரோக்கியமாக வளரும். வாரம் ஒரு முறை சனிக்கிழமைகளில் ஊரில் இருந்து சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் இருந்த கால்நடை மருத்துவமனையில் தான் ஊசி இட வேண்டும். வீட்டில் மூத்தவன் என்ற முறையில் நான் தான் கோழிகளைக் கொண்டு செல்ல வேண்டும்.


வேறு யாராவது நண்பர்கள் வருகிறார்களா என விசாரித்துக் காலையிலே கிளம்பி விடுவோம். வீட்டில் ஒவ்வொரு கோழியின் கால்களையும் தனியாக கட்டி ஒரு பெரிய கடவத்தில் வைத்து தருவார்கள்.கோழிக்கு மூச்சு திணறல் வந்துவிட கூடாது என்பதற்காக அதன் தலைகள் வெளியில் பார்த்து இருக்கும் படி செய்ய வேண்டும். சைக்கிளில் கடவத்தை வைத்து கட்டிச் சென்றாலும் ஒவ்வொரு கணமும் பின்னால் கோழி பத்திரமாக இருக்கிறதா என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும். கோழியின் கால்கள் தற்செயலாக அவிழ்ந்து அது ஓடி விடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு... மூச்சுத் திணறி மரித்துப் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு.. இரண்டில் எது நடந்தாலும் அன்று வீட்டுக்கு செல்ல முடியாது என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.

காலையில் ஒன்பது மணிக்கு முன்பே நாங்கள் கால்நடை மருத்துவமனைக்கு வந்தாலும் 'மாட்டு டாக்டர்' அவர் நேரத்திற்குத் தான் வருவார். அதுவரைக்கும் வரிசையில் கோழிகளோடு காத்திருப்போம். கோழிகளோ மிரட்சியோடு எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

சுமார் பத்தரை, பதினொன்றுக்கு வரும் டாக்டர் வரிசையாய் இருக்கும் எங்களை அலட்சியத்தோடு ஒரு பார்வை பார்த்துக் கொண்டு கட்டிடத்தைத் திறப்பார். பின் உடைகளை மாற்றிக் கொண்டு முதலில் பசு, ஆடு போன்றவைகளை கவனித்து விட்டு (ஆடு, மாடு கொண்டு வருபவர்கள் அவரை 'கவனிப்பார்கள்') கடைசியாய் எங்கள் அருகில் வருவார்...

அன்றைய நாளின் மிகப்பெரிய சவாலே அப்போது தான் எங்கள் முன் காத்திருக்கும். நாங்கள் கோழியை எடுத்து அவரிடம் நீட்டும் போது இடது கையால் அதன் சிறகை பிடித்து தூக்கி ஐந்தே வினாடிகளில் ஊசியை போட்டு விடுவார். ஒரு தடவை மருந்து நிரப்பட்ட ஊசியை வைத்து சுமார் ஐந்து கோழிகளுக்குப் போடுவதால் அவரிடம் இருந்து ஊசி போட்ட கோழியை வாங்கி வைத்து அடுத்த கோழியை எடுத்து அவரிடம் நீட்டும் முன் அவர் வாயில் இருந்து வசவாக வரும்.

கோழியை வாங்கி வைத்து அடுத்த கோழியை நீட்டும் அந்தச் சில நொடிப் பொழுதைக் கூட அவரால் தாங்க முடியாது. நாம் கோழியைக் கடவத்தில் வைத்து அடுத்த கோழியைக் கொடுக்கும் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு கோழி பயத்தில் கடவத்தில் இருந்து துள்ளிக் குதித்து தத்தி தத்தி ஓடுவதும் உண்டு. ஓடும் கோழியை பிடிக்கப் போனால் அடுத்த கோழிக்கு ஊசி போட முடியாது, போடவும் மாட்டார்.

இந்த மாட்டு டாக்டருடைய அக்கப்போர்களை சமாளிப்பதற்க்காகவே நாங்கள் நண்பர்கள் சில நேரம் ஒவ்வொருகடவமாக பிரிப்போம். முதலில் எனது கடவத்தை பிரிக்கும் போது நண்பன் ஒருவன் கோழியை ஊசி போடுவதற்காக பிடித்து கொடுப்பான் பின் அவனுடைய கடவத்தை பிரிக்கும் போது நான் கோழியை பிடித்து கொடுப்பேன். இருந்தாலும் கோழியை வாங்கி, வைக்கும் இடைவேளையில் விரையமாகும் அந்த சில நொடிகளுக்காகவும் எங்களுக்கு வசவு கிடைக்கும்.

அலுவலகத்தில் புராஜெக்ட் டெட்லைன், இன்றே கடைசி என மேலாளரால் அறிவிக்கப்படும் இந்நாட்களில் அன்று கோழிக்கு ஊசி போடும் போது மாட்டு டாக்டர் முன் கொள்ளும் பதட்டத்தை, இன்று நான் கொள்வதில்லை......

Wednesday, August 31, 2011

கதைச் சொல்லிகள்......

ஆனி, ஆடி மாதம் என்றாலே எங்கள் ஊரில் மழை கொட்டோ, கொட்டென கொட்டும். கிணறு முதல் குளம் வரை நிரம்பிவழியும் அந்நாட்களில், விளையாடுவதற்கு போக்கற்று ஏதேனும் ஒரு வீட்டு திண்ணையில் முடங்கி கிடப்போம். பொழுதே போகாத அந்த பால்ய நாட்கள் முழுவதும் எங்களை கட்டிப்போட்டது எங்கள் ஊர் கதைச்சொல்லிகளே...








கதைகள் கேட்க பெரும்பாலும் நாங்கள் கூடுவது கோவில் பிள்ளை தாத்தாவின் வீட்டுத் திண்ணையிலோ , 'கிராப்' தாத்தாவின் வீட்டுத்திண்ணையிலோ தான். மணி சித்தப்பா, ஜெயக்குமார் அண்ணன், ஜாண் அண்ணன், சுந்தரம் அண்ணன், ஸ்டான்லி அண்ணன் என எங்கள் ஊரில் கதைச்சொல்லிகளுக்கு பஞ்சமே இல்லை..அவர்கள் கதை சொல்லி முடிக்கும் போது ஒரு புராணப் படத்தை பார்த்த திருப்தி உருவாகும். பின் அக்கதை, எங்கள் வழியாக பள்ளி நண்பர்களிடையே ஊடுருவும்...

பெரும்பாலும் இவர்களுடைய கதைகள் அச்சம் ஊட்டுபவையாக இருக்கும். இவர்கள் சாகச மனிதர்களை பற்றி சொல்லும் போது அந்த மனிதர்களை தேடி போய் விடலாமா என்று கூட யோசனை போகும். இரவு வழிமறிக்கும் யாக்கிகள், பழிவாங்க காத்திருக்கும் சர்ப்பங்கள்(பாம்புகள்) போன்ற கதாப்பாத்திரங்களுடைய கதைகளை ஏறக்குறைய எல்லா கதைச்சொல்லிகளுமே சொல்லி இருப்பார்கள் ஆனால் வெவ்வேறு சம்பவங்களுடன் கோர்த்து....

சென்னை என்ற கான்கிரீட் காட்டில் தற்போது வசிக்கும் சுந்தரம் அண்ணன் பெரும்பாலும் காட்டில் நடக்கும் கதைகளை சொல்வார்.
அதில் ஒன்று...
காட்டில் ஒருவகை பறவை உண்டு , அந்த பறவை அந்த காட்டிலேயே உயரமான மரத்தில் தான் வசிக்கும் . அபூர்வமாக முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் அப்பறவை முட்டை இடும்போது அதற்காக காட்டில் அபூர்வமாக கிடைக்கும் ஒரு வேரை வைத்து ஒரு கூடு தயாரிக்கும். அந்த வேரை எடுத்து, பறந்து செல்லும் போது எந்த மிருகத்தையோ, மனிதனையோ கடந்து போனால் அந்த உயிர்களின் முதுகெலும்பு முறிந்து போகும். அந்த மரத்தில் இருந்து அந்த வேரின் நிழல் நம் மேல் படாமல் எடுத்து வந்து இரும்பின் மேல் தடவினால் தங்கமாகுமாம். தான் ஒருமுறை பேச்சிப்பாறை காட்டுக்கு சென்ற போது அந்த பறவையை பார்த்திருப்பதாக சொல்வார்....

அடுத்த ரெண்டு நாட்கள் கேட்கவே வேண்டாம்.. அந்த பறவையையும், வேரையும் கண்டுபிடிக்க மாட்டோமா... நிறைய மிட்டாய் வாங்கி சாப்பிடலாமே என ஏக்கத்தோடு அலைவோம்.

திகில் அடிக்கும் கதைகளை சொல்வதில் முதலிடம் மணி சித்தப்பாவுக்கு தான்....


நடு இரவில் எங்கேனும் போய் குளம் வழியாக வீடு திரும்பும் போது யாக்கி வழி மறிக்கலாம். யாக்கி நடு இரவிலும் பூவும், பொட்டும் வைத்திருப்பாள். நம்மிடம் வெற்றிலை கேட்பாள். சுண்ணாம்பு கொடுக்கும் போது கத்தியில் எடுத்து தான் கொடுக்க வேண்டும். பின் நாம் நடக்க ஆரம்பிக்கும் போது நமது பெயரை சொல்லி கூப்பிடுவாள் அப்போது நாம் திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டும். கையில் கத்தியோ, வெட்டோத்தியோ வைத்திருந்தால் யாக்கி நம்மை மறிக்க மாட்டாள் என அறிவுரை சொல்லுவார்.

ஊரில் நமக்கு தெரியாத ஒரு பெயரை சொல்லி அந்த நபர் பேய் அடித்து தான் இறந்தார் எனவும்.... பேய் அடித்து முதுகில் ஐந்து விரல்களில் தடம் இருந்ததாகவும் சொல்லுவார். குளத்தங்கரையில் ஒரு சில நேரம் தீ பந்தத்தை கொளுத்தி கொண்டு பேய் போனதை தான் பார்த்திருப்பதாக சொல்வார்.

ஜாண் அண்ணனும் இதே மாதிரி கதை சொல்லுவார்.....



இரவு பன்னிரண்டு மணிக்கு பின் தான் பேய்கள் கல்லறையில் இருந்து எழுந்து உலாவும் என்றும் பேய்களை நமது வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்றும், வீட்டு வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு, நாய் போன்றவற்றால் அவைகளை பார்க்க முடியும் என்றும், நாய்கள் ஓலமிடுவது பேய்கள் நடமாட்டத்தை பார்த்து தான் என்றும் சொல்வார்.
இக்கதைகளை கேட்ட சில நாட்கள் இரவு தூக்கமே வராது. நாய்கள் குரைத்தாலே பேய்கள் தான் நடமாடுகிறது என்று நான் உட்பட ஊரில் இருந்த அத்தனை வாண்டுகளும் நம்பினோம்.


சர்ப்பத்தின் கதைகளை ஏறக்குறைய எல்லோருமே சொல்வார்கள்....
ஜோடி பாம்புகளை அடிக்க கூடாது. ஒத்தையாய் பாம்பை அடித்து கொன்றால் அதன் ஜோடி காத்திருந்து பழி வாங்கும் என்றும். பாம்பை அடிக்கும் போது உடனே அடித்து கொன்று விட வேண்டும் அதை சாபமிட வைக்க கூடாது என்றும்... பாம்புக்கு கொஞ்சம் உயிர் விட்டு புதைத்தாலும் அது மண்ணின் வழியாக ஊடுருவி வந்து பழிவாங்கும் என்றும் சொல்வார்கள்.

பக்கத்து ஊரில் பாம்பின் தலையில் மண்வெட்டி வைத்து வெட்டியதில் தலை பறந்து நன்றாக வளர்ந்திருந்த ஒரு பனை மரத்தில் தட்டி விழுந்ததாகவும்.. ஒரு வாரத்திலேயே அந்த பனை மரம் பட்டு போனதாகவும் சொல்வார்கள்.

சர்ப்பங்கள், நாகரத்தின கற்களை கக்கும் கதைகள் சுவாரசியமானவை.....

நெடுநாள் விஷத்தை தேக்கி வைத்திருக்கும் நாகத்தின் வயிற்றில் நாகரத்தின கற்கள் உருவாகும். அதை அமாவாசை இரவன்று ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த நாகரத்தினத்தின் வெளிச்சத்தில் இரை தேடும். நாம் அந்த நாகரத்தினத்தை எடுக்க முயற்சித்தால் அதன் வெளிச்சம் குறையும் போது பாம்பானது நம்மை கொத்தி விடும். நாகரத்தினத்தை நாம் நடு இரவில் பார்த்தால், மாட்டு சாணத்தால் அந்த நாகரத்தினத்தை மூடி விட்டு, பக்கத்தில் உள்ள உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து விட வேண்டும். நாகரத்தினத்தின் வெளிச்சம் குறைந்து அதை தேடி வரும் சர்ப்பத்தால் அதனை கண்டுபிடிக்க முடியாமல், தன்னை தானே தற்கொலை செய்து கொள்ளும். அடுத்தநாள் விடியற்காலையில் நாகரத்தினத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு கதை.......



மழை நேரத்தில் ஆற்றில் புரண்டு வரும் தங்க அண்டாக்கள் பற்றியது. இது போல வரும் அண்டாக்களை பிடிப்பது எப்படி என்றும் சொல்வார்கள்.. தவறாக பிடித்தால் அது கவிழ்ந்து நம்மை கொன்று விடும் என்றும் சொல்வார்கள். கண்டிப்பாக ஊரில் தங்க கருப்பட்டியோ, அண்டாவோ கிடைத்த ஒருவர் இவர்களது பார்வையில் இருப்பார்கள்.

இன்று நினைத்து பார்த்தாலும் என்னால் இதே அளவு லாவகத்துடன், நம்பும்படி அக்கதைகளை சொல்ல முடியுமா என்பது சந்தேகமே.. ஆனால், அந்நாட்களின் சுவாரசியமே கேள்விகள் ஏதும் எழுப்பாமலே அக்கதைகளை நாங்கள் ஏற்றுகொண்டது தான் என்று தோன்றுகிறது. அந்த பால்ய கதை நாட்களை நிரப்பிய அண்ணன்கள் பிழைப்புக்காக பல ஊர்களில் புலம் பெயர்ந்து விட்டனர். ஊருக்கு செல்லும் போது அபூர்வமாய் தென்படும் அவர்கள் என்னை கண்டு சிநேகத்தோடு சிரித்து "நல்லா இருக்கியா, குடும்பம் எல்லாம் நல்லா இருக்கா, வேலை நல்லா போகுதா" என்று ஒரு சில கேள்விகளுக்குளாகவே நலம் விசாரித்து,நகர்ந்து போய் விடுகிறார்கள்.

அவர்கள் கடந்து போகும் போதெல்லாம் என்னுள் எழும் விடையில்லா கேள்வி.....
"எங்கே தொலைத்திருப்பார்கள் அவர்களுக்குள் இருந்த கதைச் சொல்லிகளை??"

Monday, March 28, 2011

நினைவுகள் தொடர்கதை.......... கிரிக்கெட்




உலகக் கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லுமா?, வெல்லாதா? என ஊர் நண்பர்களிடையே காரசாரமாக பேசிக்கொண்டாலும், எங்களுடைய பால்யகாலத்து கிரிக்கெட் விளையாட்டை அசை போடாமல் நகர்ந்து விடவே முடியாது.

கபடி, கச்சி(கோலி), செவன்டீஸ், கிளியான் தட்டு, கண்டு விளையாட்டு, கைபந்து( ஓ பந்து), தள்ளும் பில்லும் என விளையாடிக்கொண்டிருந்த எம் கிராமத்து வாண்டுகளை கிரிகெட் நோக்கி நகர்த்திய (துரதிஷ்டமான) பெருமை எனக்கும் உண்டு. இன்றோ... இதை பற்றி உள்ளூர நிறைய வருத்தங்களும் உண்டு.

வருடம் சரிவர ஞாபகம் இல்லை. ஆனால், எண்பதுகளின் பிற்பாதியில் ஜெயக்குமார் அண்ணன் வீட்டு தொலைகாட்சி வழியாக கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு அறிமுகமானது கிரிக்கெட். அதிகாரபூர்வமான கேப்டனாக இல்லாவிட்டாலும் கிரிக்கெட்டின் சில சட்டதிட்டங்கள் தெரிந்ததாலும், எங்களை விட நன்றாக விளையாடுவதாலும் அணித்தலைவராக சுனில் அண்ணன் செயல்பட்டான்.


எங்களுக்கு கிரிக்கெட் குறித்து ஏதேனும் சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்வதும் சுனிலண்ணன் தான். பவுலிங் போடும் போது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எதற்காக தங்கள் பேண்டில் ஒரு வெள்ளை துணியை சொருகி வைத்திருக்கிறார்கள் என்ற எங்கள் கேள்விக்கு அவன் சொல்லும் பதில் A+ ரகம்.

தொண்ணூறுகளின் இடையில் தான் ReeBok, MRF, BDM போன்ற நிறுவனங்களின் பேட்டுகள் எங்கள் ஊரை வந்தடைந்தன. அதற்கு முன்பாக நல்ல முற்றின பச்சை தென்னை மட்டையையும், பிலா மரத்தில் செதுக்கிய பலகையும் வைத்தே நெடுநாள் விளையாடினோம். பேட்டின் கைப்பிடியை அழகுபடுத்துவதற்க்காக வில்லஸ் அண்ணனின் சைக்கிள் கடையிலிருந்து சல்லீசான சைக்கிள் டியூபுகளை வெட்டி வாங்கி கைப்பிடியில் இட்டுக் கொள்வதும் உண்டு.

சிங் அண்ணனிடம் ஈட்டி மரப்பலகையில் செதுக்கிய பேட் ஓன்று இருந்தது. அந்த பேட்டில் பட்டாலே பந்து பறக்கும். அதை யாரும் திருடிவிடாமலிருக்க 'பேட்டை கோவிலில் மந்திரிச்சு வச்சிருக்கேன்' என பயம் காட்டி வைத்திருந்தான். படிக்காமல் எப்போதும் விளையாடி கொண்டிருக்கிறான் என பின்னொரு நாளில் புளியமுத்து அவிக்கும் போது விறகாக பயன்படுத்திக் கொண்டார் அவனுடைய அப்பா.



பெரும்பாலும் கடைகளிலிருந்து பந்து வாங்குவதே இல்லை. பொருளாதாரம் ஒரு காரணம் என்றாலும் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என பங்கிட்டு வாங்கப்படும் பந்துகள் வெகு சீக்கிரம் உடைந்து போய் விடும். இன்னொன்று தென்னைமரம், புளியமரம், பிறுத்தி(அன்னாசி) செடிகளுக்கு நடுவே நாங்கள் விளையாடுவதால் வெகுசீக்கிரம் தொலைந்தும் போய் விடும்.

நாங்கள் உபயோகிக்கும் பந்துகளுக்கு ஒரு வித்தியாசமான வடிவமே இருந்தது. பால் வெட்டப்பட்ட ரப்பர் மரத்தின் வெட்டு ஓரமாக ரப்பர்பால் உறைந்து இருக்கும். அதை 'ஒட்டு கறை' என்போம். சுமார் பத்து, பதினைந்து மரங்களின் ஒட்டு கறையை எடுத்து உருண்டை வடிவில் சுற்றிக்கொள்வோம். ஏறக்குறைய உள்ளங்கையடக்கமான ஒரு அளவு வந்தவுடன் ரப்பர் பாலில் தோய்த்து, அதை இரண்டு நாட்கள் காய வைத்து எடுப்போம். பின் வீட்டில் நொய்ந்து போய் கிடக்கும் பழைய வேட்டிகளை கிழித்து இறுக்கமாக சுற்றி, நெசவு நூலில் பந்தை சாக்கூசி வைத்து தைத்து விடுவோம்.

இப்போது பந்து இறுக்கமான உருண்டை வடிவத்துக்கு வந்து விடும். அதன் நூல் ஓரமாக லேசாக ரப்பர் பாலை ஊற்றி, மிதமான வெயிலில் காய வைத்து எடுத்தால் பந்து ரெடி. சரியாக சுற்றப்படும் இது போன்ற ரப்பர் துணி பந்துகள் சுமாராக மூன்று முதல் நான்கு மாதம் வரை ஓடும்.

மரங்கள் நெருக்கி சேர்த்த கிராமமாக இருந்ததால் எப்போதும் ஸ்டம்புகளுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. என்ன !!!.... ரப்பர் பந்தை விட துணிபந்து சற்றே கனமாக இருப்பதால் பல நேரம் ஸ்டாம்புகளை மாற்ற வேண்டியதாயிற்று. சில நேரம் பேட்டுகளையும்.....

கிரிக்கெட்டின் பெரும்பாலான விதிமுறைகள் எங்களுக்கு பரிச்சையமே கிடையாது. எங்களுக்குகென சில 'சிறப்பு விதிகளை' உருவக்கிகொண்டோம். எங்கள் ஊரிலேயே நாங்கள் விளையாடிக்கொண்டிருந்ததால் அச்சிறப்பு விதிகள் எங்களுக்கு பெரும் பாதிப்புகள் எதையும் தரவில்லை. இன்றும் அபத்தமான அவ்விதிகள் சிரிபூட்டுபவை.

ஒருநாள் விளையாடி கொண்டிருக்கிறோம். வெற்றிபெற எங்களில் ஓரணிக்கு 12 ரன் தேவை. ஜோஸ் அண்ணன் அடித்து விட்ட பந்து நல்லாம்பி பெரியப்பாவின் மாட்டு தொழுவம் அருகே இருந்த சாணம் குண்டில் விழ பந்தை எடுக்கும் முன் 12 ரன்களையும் ஓடியே எடுத்து விட்டார்கள்.

இன்னொருநாள்.....
கடைசி விக்கெட் வெற்றிபெற 20 ரன் எடுக்க வேண்டும். ஜாண் அண்ணன் அடித்த பந்து பக்கத்தில் இருந்த குட்டி தென்னை மரத்தின் மட்டையில் சிக்கிகொண்டது. ஜோன்ஸ் உடனடியாக மரத்திலேறி பந்தை தட்டி விட்டு கீழே நின்றிருந்த லாரன்சை கேட்ச் பிடிக்க செய்தான். துரதிஸ்டவசமாக ஜாண் அண்ணன் & கோ - வால் 15 ரன்னே எடுக்க முடிந்தது. இது கேட்ச் கிடையாது என ஒரு சாரார் வாதிட, கேட்ச் என மற்றொரு சாரார் மல்லுகட்ட தகராறு முற்றி அடுத்த ஆட்டத்திலிருந்து அந்த சிறப்பு விதிமுறை மாற்றப்பட்டது.

வாரநாட்களை காட்டிலும் வார விடுமுறை நாட்களே நாங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. வாரவிடுமுறைகளில் பெரும்பாலான வாண்டுகள் தங்கள் தகப்பனார்களின் விளைகளில்(தோப்பு) ஏதாவது ஒரு வேலையை செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருந்தனர். அவ்வாறு, விளைக்கு போகும் நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டு விளையாட வந்துவிடுபவர்கள் உண்டு. இதனாலையே, எங்கள் ஊர் பெரிசுகளுக்கு ஆரம்பகாலத்தில் கிரிக்கெட் என்றாலே வேப்பங்காயாக இருந்தது.

ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 32ரன் தேவை. மூன்றாம் பந்தை வீசிகொண்டிருந்த ராஜா, ஆவேசமாக கையில் கம்புடன்(குச்சி) ஓடி வந்த அவன் தகப்பனாரை கண்டதும் பந்தை போட்டுவிட்டு ஓடியே போய் விட்டான். எங்களூர் சிறப்பு விதிமுறையின்படி வேறு யாரும் மிச்சம் பந்துகளை வீச கூடாது. ரன் எடுக்க வேண்டிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- நினைவுகள் தொடரும்...........


Tuesday, September 1, 2009

ஓணமும் ஊஞ்சலும்.........



அழகான புகைப்படங்களுடன், ஓண வாழ்த்துகளை சுமந்து பத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் எனக்கு வந்து சேர்ந்தது.... அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான மலையாள நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுத்து விட்டு சொந்த ஊர்களுக்கு போய் இருந்தார்கள். சென்னையில் நிரந்தரமாக தங்கி இருந்த ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே அலுவலகம் வந்திருந்தார்கள், அவர்களுடைய இருப்பிடம் சென்று கை குலுக்கி விட்டு மீண்டும் எனது இருக்கைக்கு வந்து பணியை தொடர்ந்தேன்..... ஆற்றில் விழுந்த இலையை போல் நினைவுகள் என்னை என் பால்ய வயதின் ஓண நாட்களுக்கு இழுத்து சென்றது.....

எங்களுடைய கிராமம் கேரள மாநிலத்தின் வெகு அருகில் இருந்ததால், அம்மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், உணவு என பல வாழ்வியல் அம்சங்களை எங்களையும் அறியாமல் சுமந்து வந்தோம் ... ஓணம் எதற்காக கொண்டாடப்படுகிறது என அறியாத வயதிலும், அதை என்னை போன்ற பால்ய வயது சிறுசுகள் கொண்டாட எண்ணற்ற காரணங்கள் கண் முன்னே கிடந்தன....

முதலாவது காரணம், காலாண்டு பரீட்சை லீவு என்ற 'ஓண பரீட்ச லீவு'. பொதுவாக காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஓண பண்டிகைக்கு முன் முடிந்து விடுவதாலும், அதை ஒட்டி கிடைக்கும் 10 நாள் விடுமுறையே என் போன்ற 'ஆசிரியரால் உதைபடும்' பள்ளி மாணவனுக்கு பெரும் இளைப்பாறல்.

இரண்டாவது காரணம் 'தின்பண்டங்கள்'.... பெரும்பாலான உறவினர்களும், நண்பர்களும் கேரளாவிலே வேலை செய்து, இப் பண்டிகையை ஒட்டி ஊர் திரும்புவார்கள். இப்படி வருபவர்கள் வாங்கி வரும் தின்பண்டங்களால் வீடு முழுக்க சில நாட்கள் கம கமக்கும்...

மூன்றாவது முக்கிய காரணம் 'ஊஞ்சல்'.... அந்த விடுமுறை நாட்கள் முழுவதும் எங்களை உயிர்ப்பித்து வைத்திருக்கும் ஒரே விளையாட்டு.... ஓண பரீட்சையின் இறுதி நாளில் தான் பெரியவர்கள் ஊஞ்சல் கட்டி தருவார்கள்.... ஓண ஊஞ்சல் பெரும்பாலும், வீட்டை சுற்றி உள்ள பெரிய மரங்களிலே தான் இடுவார்கள்.. எல்லோருக்கும் வீட்டை ஒட்டி மரங்கள் இருப்பதிலை, ஆனால் எனக்கு வாய்த்தது. அழகான ஒரு மாமரம், எங்கள் வீட்டில் மேல் சாய்த்து வளர்ந்து நின்றது... நல்ல வலுவான தேங்காய் நாரினால் செய்யப்பட்ட கயிறையே ஊஞ்சல் கட்ட உபயோகப்படுத்துவார்கள், நைலான் கயிறுகள் இங்கே நிராகரிக்கப்படும், வலுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடும் அபாயம் உள்ளதால்.....

முதலில் கயிறு கட்ட போகும் கொம்பில், ஒரு கோணிப்பையை(சாக்கு) வைத்து விட்டு அதன் மேல் கயிற்றின் நடு பகுதியை மரத்தின் கொம்போடு கட்டுவார்கள். கோணிப்பை வைப்பதற்கு காரணம் கயிறு வெகு விரைவில் தேய்ந்து விடாமல் இருப்பதற்கே... கயிற்றின் முனைகளில் நல்ல ஒரு மரத்தின் வலுவான கம்பை வைத்து கட்டுவார்கள்... பெரும்பாலும் முனை தேய்ந்து இருக்கும் உலக்கையே இதற்கு பயன்படும். அப்புறம் என்ன... ஆட்டமோ ஆட்டம் தான்...

ஊஞ்சலில் ஒருவர் ஆட்டி விட மற்றொருவர் ஆடி வருவார். நான் ஒரு நண்பனை 25 தடவை ஆட்டி விட்டால் அவனும் என்னை 25 தடவை ஆட்டி விட வேண்டும். எழுதப்படாத ஒப்பந்தம் இது... சிலர் தான் மட்டும் ஆடி விட்டு ஓடி விடுவதால் விளையாட்டு ரோதனை ஆகி விடுவதும் உண்டு..

ஆடுபவரை ஆட்டி விட்டு, அந்த ஊஞ்சலின் அடியில் வேகமாக ஓடுவதற்கு பெயர் தண்ணி குடம் எடுப்பு... நல்ல தைரியமானவர்களால் மட்டுமே இது போன்ற ஒரு சில வித்தியாசமான வித்தைகளை காட்ட இயலும். இன்னொன்றும் உண்டு ஒருவரை உலக்கையின் மேல் உட்கார வைத்து விட்டு, மற்றொருவர் உலக்கையின் மேல் நின்று கொண்டும் ஆடுவது, மிகவும் அபாயம் ஆனதும் கூட....... தவறி விழுந்து விட்டால் அடுத்த விடுமுறை நாட்கள் அனைத்தும், கைகளில் கட்டுகளோடு மற்றவர்கள் ஆடுவதை பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

எவ்வளவோ ஆடி களைத்தாலும், பரீட்சை விடுமுறை முடியும் போது நைந்த கயிரோடும் , பிய்ந்த கோணிப்பையோடும் ஊஞ்சல் கழற்றப்படுவதை பார்த்து மனம் விசும்பாமல் இருப்பதில்லை..

சென்ற விடுமுறை நாளில் நாங்கள் வசித்த முதல் வீட்டிற்கு சென்றிருந்தேன்...... பால்யத்தில் ஊஞ்சல் விளையாடிய மாமரம் அதன் வனப்பு குறைந்து வயதாகி நின்றது.. ஆசையோடு தடவி பார்த்தேன். நீண்ட நாட்கள் கழித்து என்னை பார்த்த மகிழ்ச்சி அதற்கு இருந்திருக்க வேண்டும் பலமாய் அசைந்து எனக்கு மறு மொழி சொன்னது.. நாங்கள் ஓண ஊஞ்சல் கட்டிய கொம்பு சற்று பருத்து இன்னொரு ஊஞ்சலுக்காய் காத்து கொண்டு இருந்தது ,ஆனால் விளையாட தான் யாருமே இல்லை. அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தைகள் வீட்டில் கணிப்பொறியோடு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள்..

Friday, August 14, 2009

ஒரு கிராமத்தானின் கடிதம் - நண்பனுக்கு




மக்கா.... சோமா இருக்குதியளா? பயக்க எல்லாம் சோமா இருக்கானுவளா? ஊரில வேற என்னடே விசேசம்? பேப்பர்லையும், டிவிலையும் பாத்துருப்ப, டெய்லி பண்ணி காச்சல்ல பத்து பேரு செத்து போரானுவளாம். சோக்கேடுனால செத்து போரவனுவள விட இவனுவ கிளப்புற பீதியில பேதி வந்து செத்துருவானுவ போல இருக்கு. இங்க எவன பாத்தாலும் மூக்குல கைய வச்சிக்கிட்டே நடக்கியானுவ. முந்தா நாள் வரைக்கும் மூக்குக்க கிட்ட வந்து துப்பி துப்பி பேசினவனுவ இப்ப கிட்டையே வரல.

"யான வந்தா ஆள கொல்லும், மைரையா பிடுங்கும்னு" இருந்த நமக்கே கொஞ்சம் பேடியாதான் இருக்கு.ஜலதோசத்துல எள்ளு போல மூக்கு ஒழுவுனா கூட பண்ணி காச்சல் வந்துட்டோன்னு பயர வேண்டியது இருக்கு.சரி மக்கா எனக்கு தெரிஞ்ச ரெண்டு, மூணு விசையத்த எழுதியன், நீயும் நம்ம பயலுவ கிட்ட சொல்லு... சரியா??

பண்ணி காச்சல் ஏதோ ஒரு வைரசுனால வருதாம். இந்த சோக்கேடு மொதல்ல பாரின்ல தான் வந்துது, பிறவு பாரின்ல இருந்து நம்ம நாட்டுக்கு வந்த பயலுவளால நம்ம எடத்துல பரவீட்டு இருக்கு. இது காத்துல தும்முனாலோ, துப்புனாலோ பறவுறனால தான் பெரிய மண்ட வேதன.

இங்கேரு... எவனுக்காவது காச்சலோ, பீச்சலோ, மூக்கு ஒளுக்கோ ரெண்டு நாளைக்க மேல இருந்தா ஆசுபத்திரிக்கு போவ சொல்லு. பீடிய குடிச்சிட்டு எங்கேயாவது முக்குல கமந்து கிடக்க போரானுவ. பிறவு ஒஸீல எவனாவது ஓல்ட் மங்க் தந்தான்னு குடிச்சிட்டு கிடக்காதிங்க, இந்த நேரத்துல நல்லதில்ல சொல்லிட்டேன்.

பின்ன ஆசுபத்திரியில பெரிசா கியூ நிக்குன்னு சொல்லியானுவ. இந்த கவன்மன்று காரனுவள நெனச்சா எரிச்சலா இருக்கு. இங்க மனுசன் பேடிச்சு பெய் கிடக்கான், இவனுவ என்னாண்ணா ரெத்தம் எடுக்கியது, டெஸ்ட் பண்ணியதுன்னு நேரத்த ஓட்டிட்டு , சோக்கேடு இருக்கானு நாலு நாளைக்கு சொல்ல மாட்டேங்கிறானுவளாம். என்ன மக்கா செய்யது சும்மாளா சொன்னானுவ "உயிர் பொழைக்கணுமுண்ணா ஒண்ணுக்கு அடிச்சு தான் ஆகணுமுன்னு".

மக்கா சுத்தமா இருந்தா இந்த சோக்கேடே கிட்ட வராதுன்னு சொன்னானுவ. குளத்துல வெள்ளம் கிடக்கனால டெய்லி மூணு நேரம் குளிங்க. பைனியோ, பப்பாளியோ கிடச்சா அடிச்சு சப்புங்க... நேத்து ரேடியோவுல சொன்னானுவ துளசி தின்னாலும் கொள்ளாமுண்ணு.

பிறவு வேற யாதாவது வெவரம் வேணுமுண்ணா கீழ உள்ள நம்பருக்கு போன போடுங்க.
044-24321569, 25305000, 25305723, 011-23061469, 1075 .

இப்படிக்கு
ஒங்க கூட்டுக்காரன்